Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paper Padikkum Erumbu
Paper Padikkum Erumbu
Paper Padikkum Erumbu
Ebook280 pages2 hours

Paper Padikkum Erumbu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580112301924
Paper Padikkum Erumbu

Read more from Bakkiyam Ramasamy

Related to Paper Padikkum Erumbu

Related ebooks

Related categories

Reviews for Paper Padikkum Erumbu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paper Padikkum Erumbu - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    பேப்பர் படிக்கும் எறும்பு

    Paper Padikkum Erumbu

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For other books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பேப்பர் படிக்கும் எறும்பு

    பாக்கியம் ராமசாமியின்

    நகைச்சுவை கட்டுரைகள்

    என்னுரை

    நகைச்சுவைக் கதைகள் எழுதுவதைவிட அந்தச் சுவையில் கட்டுரை எழுதவே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ஒரு சங்கீத வித்துவானுக்கு ஆலாபனையில் ஏற்படும் குஷி நகைச்சுவை எழுத்தாளனுக்குக் கட்டுரை எழுதும்போது ஏற்படுகிறது. சஞ்சார சுதந்திரம் கொஞ்சம் அதிகம்.

    சிரிப்பாரை சிரிப்பாரே காமுறுவர் என்னும் பழமொழிக்கு ஏற்ப, இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளுக்கு திரு.கிரேஸி அவர்கள் பாராட்டுரை வழங்கியுள்ளார். நான் அப்பர் என்றால் அவர் என்னை விடப் பெரிய Upper! சிரிஞான சம்பந்தர்.

    என் மண்டையை உடைத்துக் கொண்டோ அல்லது அதற்குள்ளே இருப்பதாகக் கருதப்படும் மூளையைக் கசக்கிக் கொண்டோ இவற்றை நான் எழுதவில்லை.

    சுகமாக எழுதினேன். சுகமாக வெளியிட்டுள்ளார் பதிப்பக அரசு வானதி திருநாவுக்கரசு ஆகவே வாசகர்களுக்கும் அந்த சுகம் ஏற்படக் கூடும்.

    இந்தக் கட்டுரைகளைப் பிரசுரித்த சகோதர பத்திரிகைகளுக்கு என் நன்றி.

    பாக்கியம் ராமசாமி

    அணிந்துரை

    ஒரு புத்தகத்தை நாம் கையிலெடுத்தால் ஒரு புது உலகத்துக்குள் நாம் பிரவேசிக்கிறோம் என்பதே உண்மை! எத்தனை எத்தனைப் புத்தகங்கள், எத்தனை எத்தனைக் கருத்துக்களைத் தாங்கி வருகின்றன. இலக்கியம், அறிவியல், நிகழ்வுகள் எனப் பதிவு செய்யும் புத்தகங்கள் அந்தந்த காலங்களின் குறியீடுகள்!

    ஒரு புத்தகம் நம் கையில் இருந்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு நாம் படிக்கிறோம் என்றில்லாமல், அப்புத்தகம் நம்மை தனக்குள் இழுத்துக் கொண்டோடினால், அது மிகச் சிறந்த நூல்! அப்படியொரு நூலைத் தந்திருக்கிறார் திரு. பாக்கியம் ராமசாமி. நாடறிந்த நல்லதொரு படைப்பாளி!

    பலருக்கும் நகைச்சுவையாகப் பேசவே வரவில்லை என்றதொரு ஏக்கம் எழுகையில், நகைச்சுவையாகவே முழுக்க முழுக்க முழுத்தொகுப்பும் தரமுடியும் எனும் உச்சபட்ச உத்திரவாதம் தரவல்லவர் பாக்கியம் ராமசாமி. அவருடைய நகைச்சுவைக் கலைப் படைப்புகளில் இணையும் மற்றுமொரு நற்தொகுப்பு இது!

    "சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே

    சொந்தமான கையிருப்பு!

    வேறு ஜீவராசிகள் செய்யமுடியாத

    செயலாகும் இந்தச் சிரிப்பு!"

    இது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் உன்னதப் பாடல் வரிகள்! அறுபது ஆண்டுகட்கு முன் அவர் சொன்ன வரிகள், கணினி யுகத்தில் இப்போது மனிதனுக்கு இருக்கும் அழுத்தங்களுக்கு, மருந்து எடுத்துக்கொள்கிறானோ இல்லையோ, சிரிப்பு மருந்தை எடுத்துக் கொண்டே தீர வேண்டும்.

    அந்தச் சிரிப்பு மருந்தைத் தேன் குழைத்துத் தருகிறார் பாக்கியம் ராமசாமி. சிரிப்பே இனிமையானது. அதனுடன் தேனுமா? ஆம்! மற்றவர்கள் இனிமையான நகைச்சுவை தருவார்கள் என்றால், நகைச்சுவை + பாக்கியம் ராமசாமி = தேன்சுவைச் சிரிப்பு என அடையாளப்படுத்திக் கொள்ளலாம் !

    சிரிப்புத் துணுக்குகள், தெறிப்புகள் எழுதலாம், ஏன் கவிதைகள், சிறுகதைகளிலும்கூட நகைச்சுவையை நச்சென ஒட்ட வைக்கலாம்! ஆனால் கட்டுரை வடிவில், அதுவும் தொகுப்பு முழுதுமே நகைச்சுவை என்றால்?. வியக்கத் தோன்றுகிறது. ஆனால் அப்பாவி அப்பாசாமியாய் பாக்கியம் ராமசாமி தரும் தன்னிலை விளக்கம், இவர்மேல் இன்னும் ஆச்சரியம் கூட்டுகிறது.

    ‘என் மண்டையை உடைத்துக் கொண்டோ அல்லது அதற்குள்ளே இருப்பதாகக் கருதப்படும் மூளையைக் கசக்கிக் கொண்டோ இவற்றை நான் எழுதவில்லை. சுகமாக எழுதினேன். ஆகவே வாசகர்களுக்கும் அந்த சுகம் ஏற்படக் கூடும்’ என்கிறார். உண்மையான கூற்று தான்! நன்றாக நாடி பிடித்திருக்கிறார்!

    முதல் அத்தியாயத்திலேயே எடுத்த எடுப்பிலேயே தன் முத்திரையைப் பதிக்கிறார். 'விஷ்ணு இலையுடன் ஒருநாள் தான்’ பட்டபாட்டை அவர் சுட்டும் விதத்தில், நாமும் ஒரு விஷ்ணு இலையில் சுருட்டப் பட்ட சூழலைக் காட்டுகிறார். ‘தானம் கொடுத்த மாட்டுக்குப் பல்லைப் பிடிச்சு பார்த்த கதை' என்பார்களே! இங்கே இவரிடத்தில் அது தலைகீழாய் மாறி, இவர் தானம் கொடுக்க, மாடு இவர் பல்லைப் பிடித்த கதையானதைப் படிக்கும் போது எழும் சிரிப்பைத் தடுக்க முடியவில்லை! அந்தக் குபிர் சிரிப்போடு திடீர் சிந்தனையையும் விதைக்கிறார். எந்தவொரு செயலையும் செய்யும்போது அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளவேண்டும் என்றவொரு ஞானோதயமும் நமக்கு கிடைக்கிறது.

    அக்ரஹாரத்து சம்பவங்களை அவருக்கே உரிய மொழியுடன், நடையுடன் தருவதில் பாக்கியம் ராமசாமி படு அமர்க்களப்படுத்துவார் என்பது நாமறிந்ததே! குப்பத்து குப்பம்மா குட்டியின் நடையில் இவர் இப்படி கும்மியடிப்பார் என்பது இம்மியும் எனக்குத் தெரியாது. மேனாட்டின் துப்பறியும் புலி ஷெர்லாக் ஹோம்ஸ் பாணி உலகப்புகழ்! ஆனால் இவர் காட்டுகின்ற 'ஷேர் லக் கூம்ஸ்’ அசலையும் மிஞ்சுகின்ற அசத்தலான நகல்! கு.கு.வுக்கு (குப்பம்மா குட்டி) அவர் காட்டுகின்ற துப்பறியும் தோரணை ! மிகமிக அசத்தலான வர்ணனை ஊசிக் காதுக்குள் ஒட்டகத்தை நுழைக்கின்ற அசாதாரணத்தை தன் எழுத்துக்களில் காட்டும்போது, சிலிர்ப்பையும் சிரிப்பையும் ஒன்றோடு ஒன்று எப்படி இவரால் பின்னியெடுக்க முடிகிறது என்ற வியப்பு மேலிடுகிறது.

    ‘புரபசர் சகல சந்தேக நிவாரணி’யை வாசகர்கள் மட்டுமல்ல; படைப்பாளிகளும்கூட கண்டிப்பாகப் படித்தே ஆகவேண்டும். குறிப்பாக முதல் தொகுப்பைக் கண்டுவிட வேண்டும் என்ற படைப்பாளிகள் படித்தால் பயனுறலாம். தன்னுடைய படைப்பு பதிப்பகம் சென்று, வாசகனை அடைவதற்கு புரபசர் எடுக்கும் சிரத்தை, கிச்சுகிச்சு மூட்டவும் செய்கிறது. காத்திரமாய் சிந்திக்கவும் வைக்கிறது. மக்களிடம் ஒரு படைப்பு எப்படி போய்ச் சேர வேண்டும் என்பதைவிடவும் எப்படிப்பட்ட படைப்பு போய்ச்சேர வேண்டும் என்பதையும் புரபசர் மூலமாகக் காட்டிப் பாடம் நடத்திவிட்டார் ராமசாமி.

    தன்னுடைய படைப்பு தரம் மிக்க படைப்பு என்று ஒரு படைப்பாளி தம்பட்டம் அடித்துக் கொள்வதை விட, அப்படைப்பு அவன் வாழும் காலத்தைத் தாண்டியும் இச்சமூகத்தில் எப்படி நிலைபெறுகிறது என்பதே கவனத்தில் கொள்ளப்படும். அதைக் காலம் தான் தீர்மானிக்குமே தவிர, படைப்பைத் தந்த படைப்பாளி அல்ல; ஆனால் ‘கந்த சிஸ்டக் கவசம்’ என்று இவர் தந்திடும் அந்த 'சிஸ்டக் கவசம்’ எதிர் காலத்தில் கம்ப்யூட்டரைக் காக்கும் கவசமாகக்கூட பயன்படுத்தலாமோ என்றவொரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ‘வாழ்க!. கோஷம் போடும் கூட்டங்கள் அரசியல்வாதிகளால் கூட்ட முடிகிறது. இந்த வாழ்த்தொலிகள்தான் அவர்களை வாழ்விக்கிறது என்பது உண்மையாகிடும்போது ‘கந்த சிஸ்டக் கவசம்’ ஏன் கம்ப்யூட்டரைக் காக்க முடியாது? என்ற லாஜிக்கான கேள்வியும் எழுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்! நாமாவளி பாடுபவர்கள் ‘சிஸ்டக் கவசத்தை’ கையிலெடுத்துக் கொள்வார்களே யானால், இதோ தெரிகிறது காலத்தைக் கடந்த தொரு படைப்பு! ‘என்னப்பா, மெய்யாவா?’ என்றால், 'காக்க காக்க, பாக்கியம் ராமசாமி காக்க!’

    இத்தொகுப்பு முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டுதானே சுழல்கிறது. இதில் சீரிய கருத்துக்கள் இருக்குமா என்றால், சீரிய என்ன, சீரியஸ் கருத்துக்களேகூட முடிச்சவிழ்த்து மூளைக்குள் சென்று பதிகின்றன.

    ‘துக்கத்துக்கு டாட்டா' என்கிற தலைப்பில் ஆசிரியர் தருகிற தகவல் நகைச்சுவையாய் தொடங்கி நல்ல கருத்தைத் தொட்டுக்காட்டி, நகைச்சுவையாகவே முடிகிறது. அன்றைக்கும் இன்றைக்கும் இருக்கும் ‘துக்க வீட்டை' படம்பிடிக்கும் இவரது எழுத்தில் உண்மையிலேயே துக்கம் குறித்து வெகுவாகவே யோசிக்க வைக்கிறது. விமானம் விண்ணேறுவதும், தரையிறங்குவதுமான நிகழ்வுபோல நகைச்சுவையை ஒரு தளமாக பாவிக்கும் பாக்கியம் ராமசாமியின் எழுத்துக்கள் தன் தனிப்பாணியைப் புலப்படுத்துகின்றன.

    சரி, பாக்கியம் ராமசாமியின் பாணி இதுதான் என நகைச்சுவையாய் நாம் ஒரு தீர்மானத்துக்கு வரலா மென்றால், எங்கோ போய் நின்று ‘நான் அவனில்லை!’ என்கிறார். ‘புருஷன்’ கதை மூலம், ‘அம்புலி மாமா'வை வாசித்தவர்கள்தான் இன்றைக்கு இருக்கும் பெரும் எழுத்தாளர்கள்! அந்த வகைப்படி பார்த்தால் 'அம்புலி மாமா'தான் குருநாதர்! அதில் வாசித்த கதைபோல இவர் காட்டும் 'புருஷன்' புல்லரிக்கச் செய்கிறார்.

    தொகுப்பு முழுதுமே விரவிக்கிடக்கும் நகைச்சுவை வரிகள், வாசிப்பவரை வளைத்திழுத்துக் கொண்டு வஞ்சமின்றி சிரிக்க வைக்கின்றன. சில தொகுப்புக் கட்டுரைகளை படித்தபின் ‘அப்பாடா! முடித்தாகி விட்டது!’ என்று தோன்றும். ஆனால் இத்தொகுப்பு ‘அடடா! முடித்துவிட்டோமே!’ என்று மீள் வாசிப்புக்குப் போக வேண்டிய ஒரு உந்துதல் தருகிறது. பாக்கியம் ராமசாமியின் எழுத்துக்களின் நகைச்சுவை வீரியம் அது.

    பீறிட்டெழும் நகைச்சுவை உணர்வோடு வடிக்கப் பெற்றிருக்கும் இந்நூல், வாசித்தலுக்கு மட்டுமின்றி பரிசளித்தலுக்கும் உகந்த நூல்!

    'மனிதன் சிரிக்கின்ற ஒவ்வொரு நாளும் அவன் மரணம் தள்ளிப் போடப்படுகிறது!’ என்பது பழமொழி! நம் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் அந்த சிரிப்பெனும் அருமருந்தைத் தேன் குழைத்துத் தந்திருக்கும் பாக்கியம்ராமசாமியின் இத்தொகுப்பைக் கையிலேந்துவதே பெரும்பாக்கியம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. சிரிப்பில் நெகிழ்ந்த மனத்தோடு, நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும்!

    அன்பன்

    கொற்றவன்

    உள்ளடக்கம்

    1. விஷ்ணு இலையுடன் ஒரு நாள்

    2. பஜ்ஜி சாஸ்திரம்!

    3. ஈஸி இல்லாத ஈஸி சேர்!

    4. திடீர் தாக்குதல் வேண்டாம்

    5. முதியோரே, புதிய பார்வை பாருங்கள்

    6. தபாலுக்குள் காய்கறி!

    7. ஷேர் லக் கூம்ஸ்

    8. பேப்பர் படிக்கும் எறும்பு

    9. ராசி - கொஞ்சம் - யோசி!

    10. கார் என்று பேர் படைத்தாய்

    11. புரொபசர் சகல சந்தேக நிவாரணி!

    12. கந்த ‘சிஸ்ட’க் கவசம்

    13. எங்க வீட்டு யந்திரங்கள்!

    14. நடுநிசிப் பாடகர்

    15. துக்கத்துக்கு டாட்டா

    16. ஒரு இங்கிலீஷ் கதை

    17. ஊட்டி ஜாக்கிரதை

    18. பாவம், இவளொரு தைக்ப

    19. பரபரப்பு

    20. புருஷன்

    21. எலி வளைகளில் நான்

    22. மலிவாய்ப் போய்விட்ட வீட்டுக் குறிப்புகள்

    23. ‘விமு’ யாரை விட்டது?

    24. குடிகார குதிரையும் சதிகார மாப்பிள்ளையும்

    25. காப்பியாகவே கறக்கிற பசு

    26. பல காக்கைகளும் சில வடகங்களும்.

    27. சித்திரை, வைகாசியே மேல்

    28. விரதம் ஸ்பெஷல்

    29. எழுதாத காவியம்!

    30. ஒளிந்து வாழும் கலை

    31. கவலை நிருபர் கற்பூரசாமி

    1. விஷ்ணு இலையுடன் ஒரு நாள்

    விஷ்ணு இலையில் உட்கார ஆள் கிடைக்கவில்லை.

    மாமூலாக மாப்பிள்ளைகள் யாராவது சிக்குவார்கள்! திடீரென்று ஆட்டோ ஸ்டிரைக்கினால் போக்குவரத்து ஸ்தம்பித்து மாப்பிள்ளை வகையறா யாரும் தலை காட்டவில்லை.

    தற்காலத்தில் விஸ்தாரமாகத் திதி கொடுப்பவர்கள், (சிரார்த்தம், திவசம் என்றும் குறிப்பிடப்படும்) அருகிவிட்டனர். மழைப் பிடிப்புப் பிரதேசங்கள் மாதிரி நகரில் ஒரு சில வட்டாரங்கள் சிரார்த்தம் செய்யத் தோதான இடமாக உள்ளன. நம் மாதிரி நகரில் எங்கோ மூலை முடுக்கில் இருப்பவர்கள் பாடு சிரமம் தான்.

    என் மீதுள்ள அபிமானத்தினால் வெகு தொலைவிலிருந்து ஒரு சாஸ்திரி மாமா என் வீட்டு சிரார்த்த காரியங்களுக்குத் தவறாமல் நீண்ட காலமாக வந்து கொண்டிருந்தார். கொஞ்சம் தள்ளாதவராகி விட்டதால் அப்பப்போ தள்ளி விடுவதற்காகக் கூடவே ஒரு துணை புரோகிதரை (சுமார் ரகம்) அழைத்து வருவார்.

    பம்மலிலிருந்து பலவித உபாயங்களைப் பயன்படுத்தி மெதுவாகப் பகல் பன்னிரண்டுக்குத் தக்க துணையுடன் வந்து சேருவார். சிலபேர் மாதிரி வந்ததும் ஸ்நானம் கீனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டார். சாஸ்திரத்தில் பகல் பன்னிரண்டுக்கு மேல் தான் சிரார்த்தமே செய்யத் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று சில மேற்கோள்கள் காட்டுவார்.

    சிரார்த்தம் என்பதை அவர் முடிக்க பிற்பகல் மூன்று மணி ஆகிவிடும்.

    திவசத்தன்று பிதுர்களுக்கு இரண்டு இலையும், விஷ்ணுவுக்கு ஒர் இலையும் போடுவது வழக்கம். பிதுர்களின் இலையில் அழைக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் உட்கார வைக்கப்படுவார்கள். விஷ்ணு இலைக்கு வீட்டிலுள்ள மாப்பிள்ளையோ அல்லது உறவினர் யாராவதோ அல்லது சிறுவன் யாராவதோ உட்காருவது வழக்கம். யாருமே கிடைக்கவில்லையென்றால் நண்பரையோ, உறவுக்காரரையோ இதற்கென்று ஸ்பெஷலாக வரவழைப்பதும் உண்டு.

    குறிப்பிட்ட வருடம் விஷ்ணு இலையில் உட்கார ஒருத்தரும் அகப்படவில்லை.

    அழகான சாப்பாடு விஷ்ணு இலையில் கண்ணைப் பறித்தது. சில வீடுகளில் விஷ்ணு இலைக்கு ஒரவஞ்சனை செய்வார்கள். சும்மா அது ஒள ஒளாக் கட்டைக்குத் தானே என்று அந்த இலைக்குத் துளித் துளி பரிமாறுவார்கள்.

    எங்கள் வீட்டில் கியாரண்டியாக எந்த மாப்பிள்ளையாவது உட்காருவாராதலால் எல்லாமே தாராளமாகப் பரிமாறி விடுவார்கள். சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையின் மனைவியும் அதாவது என் பெண்ணும் ஸ்தலத்திலேயே இருப்பதால் சகலமும் சற்றுத் தாராளமாகவே மேற்படி இலைக்குச் சேரும்படி பார்த்துக் கொள்வாள்.

    மெளனேன போக்த்வா என்று திதிகொடுப்பவர் சொல்வார். அதாவது பித்ரு வடிவாக வந்த பிராமணர்கள் மெளனமாகச் சாப்பிடுவார்களாக. ‘இந்த அயிட்டத்திலே உப்பு இல்லை. இது கொஞ்சம் விக்குகிறது. இதில் கொஞ்சம் புளி தூக்கல்’ என்றெல்லாம் சாப்பிடுகிற பிராம்மணர்கள் சொல்லக் கூடாது. சுருக்கமாக கொச்சையாகச் சொல்வதானால் ‘வாயை மூடிண்டு சாப்பிட்டுப் போங்கோ’

    சில பேர் சட்டத்தை மீறி ‘மோர்க் குழம்புக்குத் துளி உப்பு போட்டிருந்தியானால் இன்னும் ஜோராக இருந்திருக்கும். அதனால் பரவாயில்லை. இது வேணும் அது வேணும்னு திதிக்குச் சாப்பிடுகிறவர் கேட்கப்படாது. சும்மா சொன்னேன்’ என்று எல்லாமே சொல்லி உப்பு கொண்டுவரச் சொல்லி விடுவார்கள்.

    விஷ்ணு இலையைப் பொறுத்தமட்டில் இலை முன்னால் ஒரு சந்தனக் கட்டையை வைப்பது வழக்கம். சில வீடுகளில் விஷ்ணு பாதம் என்று ஒரு தட்டை விஷ்ணு பாதம் பொறித்து எந்தக் காலத்திலோ மூதாதையர் காசியிலிருந்து வாங்கி வந்த சிறு தாம்பிரத் தட்டு, அதைத் திவசத்தன்று மட்டும் பளபளவென்று தேய்த்து வைப்பது வழக்கம்.

    சந்தனக் கட்டையில் விஷ்ணுவை ஆவாஹனம் செய்திருந்தாலும் அவர் இதர பிராமின்ஸுகளுடன் சரிசமாக அமர்ந்து சாப்பிட நேரில் வரமாட்டார்.

    ஆகவே பரிமாறியது பரிமாறியபடியே இருக்கும். வேறு யாராவதுதான் அந்த இலையில் அமர வேண்டும்.

    திவசம் செய்கிறவர்களே சாப்பிட்டு விடக்கூடாது. அதில் உட்கார சில கண்டிஷன்கள் உண்டு.

    அப்படி யாருமே உட்காரக் கிடைக்கவில்லையென்றால்?

    எனக்கு இந்த வருஷம்தான் அந்தப் பிரச்சினை, வேலை நிறுத்தத்தால், முக்கியமாக ஆட்டோ வேலை நிறுத்தத்தினால் ஏற்பட்டது.

    பம்மல் சாஸ்திரி மாமாவிடம் பிரச்சினையைச் சொன்னதும் அவர் துளிக் கலங்காமல் பேசாமல் ஏதாவது பசு மாட்டுக்குக் கொடுத்துடு என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார். ஏதோ மந்தை மந்தையாக இங்கெல்லாம் பசுக்கள் கொட்டிக் கிடப்பது போல.

    ஸிடியில் பசுமாடாவது கடாமாடாவது. அதனால் விஷ்ணு இலையை அப்படியே மடித்து பெரிய பளபள எவர்சில்வர் தூக்கில் போட்டுக் கொண்டு ஜுராஸிக் பேபி நாடக மலையாள வைத்தியர் மாதிரி தெருத் தெருவாக மாடு பார்க்கப் புறப்பட்டேன். பலரை விசாரித்தேன். தங்கள் மாடுகளைப் போலீஸ் பிடித்துப் போன சோக வரலாறுகள்தான் கிடைத்தன. காஞ்சிபுரம் போனால் சகல மாடுகளையும் பார்க்கலாம் என்றார் ஒரு பால்காரர்.

    ஆனால் என்னால் பசு மாடு தேடி பாரெங்கும் அலைய முடியாது. வயிற்றில் பசிக் குடைச்சல் வேறு.

    சாஸ்திரத்திலும் சிரார்த்தம் முடிந்து பத்து நிமிஷத்தில் இலையைப் போட்டு கிரகஸ்தன் சாப்பிடக் கடவன் என்று சொல்லியிருக்கிறது. (இதை வருஷா வருஷம் பம்மல் சாஸ்திரிகள் சொல்வது வழக்கம்)

    நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று இலை போட்டு வைத்திருந்த பாத்திரத்துடன் நானே ஒரு சோக பாத்திரமாகச் சென்று கொண்டிருந்த போது ‘அம்மா’ என்று ஒரு கம்பீரமான அழைப்பு.

    எனது அம்மாவே குரல் கொடுப்பது போலிருந்தது. ‘கன்றின் குரலைக் கேட்டு கனிந்து வரும் பசுபோல்’ குரல் வந்த திசையில் ஒடினேன்.

    சில வாரம் முன் புதிதாகப் புனருத்தாரணமோ ஜீர்ணோத்தாரணமோ செய்யப்பட்ட பெருமாள் கோயிலுக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது.

    கதவு லேசாகச் சாத்தியிருந்தது. அவரசத்துக்குப் பாவமில்லை என்று உள்ளே பிரவேசித்து விட்டேன்.

    கோயிலில் சுத்தமாக யாரும் கிடையாது. (அகத்தமாகவும் யாரும் இல்லை)

    வெரிச்சோவென்றிருந்தது. கோயிலின் ஸைடு வாக்கில் ஒரு பசுமாடும் கன்றும் காணப்பட்டன. வெள்ளை வெளேர்ப் பசு.

    Enjoying the preview?
    Page 1 of 1