Idhaya Koyil
3.5/5
()
About this ebook
Related to Idhaya Koyil
Related ebooks
Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Ninaithu Marukuthadi Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Nesapoove! Rating: 0 out of 5 stars0 ratingsVennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Nesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsAriyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Sandhiya Rating: 5 out of 5 stars5/5En Varna Nila Rating: 0 out of 5 stars0 ratingsKadambavana Kaadhal Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsYazhini Endroru Thenaruvi Rating: 4 out of 5 stars4/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsThunaiyiruppaal Durga Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Thedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rattinam Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMagizhampoo Rating: 0 out of 5 stars0 ratingsSoodikodutha Sudarkodiye Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5
Related categories
Reviews for Idhaya Koyil
3 ratings0 reviews
Book preview
Idhaya Koyil - Lakshmi Rajarathinam
https://www.pustaka.co.in
இதயக் கோயில்
Idhaya Koyil
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
மீண்டும் நினைவலைகள்
1. வேண்டாத மனைவி
2. உறுதிமொழி
3. குரங்கு கைப்பூமாலை
4. வசந்தாவின் காதலன்
5. பாட்டுக் கச்சேரி
6. விருந்துக்குப் பிறகு
7. மனைவிக்குச் சம்பளம்
8. வசந்தாவின் மணம்
9. நீர்வீழ்ச்சிக் கரையில்
10. பாராமுகம்
11. விமானப் பயணம்
12. பொய்த் தந்தி
13. காதல் தூது
14. திருமணத் தூது
15. அமெரிக்கப் பிசாசு
16. மீண்டும் அமெரிக்கப் பயணம்
17. சுபத்திராவின் மனநிலை
18. ரோஸியின் தீர்மானம்
19. ஏமாற்றம்
20. மனக் கலக்கம்
21. கென்னடி முனையில்
22. எதிலும் வெறுப்பு
23. தெளிவு பிறந்தது
24. அணையும் சுடர்
மீண்டும் நினைவலைகள்
இந்தப் பெயரைச் சொல்லும் பொழுதே ஏகப்பட்ட உணர்ச்சிக் குவியல்கள் பின்னிபிணைந்து கிடக்கின்றன. நாவலை எழுதி முடித்தபின் சுபத்ராவுக்காக அழுதவள் நான். என் எழுத்திற்கு, நான்தான் படைக்கும் பிரம்மா. அதனால் அவள் முடிவை மாற்ற என்னால் முடியவில்லை.
முதலில் இந்த இதயக் கோயில் சிறுகுறுநாவல் கோயிலாகத்தான் எழும்பியது. அதை விரித்துக் கட்டியபின் கலைமகள் நாராயணஸ்வாமி பரிசுப் போட்டிக்கு அனுப்பினேன். டெல்லியிலிருந்து போட்டிக்கு அனுப்பிய பின்பு சென்னைக்கு வந்துவிட்டேன். முடிவு தெரிய கொஞ்சம் காலமாகியது.
ஒருநாள் ரேஷன் கடைக்குப் போய்விட்டு வந்துக் கொண்டிருந்தேன். மாதக் கடைசித் தேதிகளில்கூட ரேஷன் போடாத அவனைத் திட்டிக்கொண்டு வந்தேன். என் தெருமுனைக் கடையில் புதுக்கலைமகள் அப்பொழுதுதான் வந்திருந்தது. பழக்கமான என் வாடிக்கை கடை. உரிமையுடன் எடுத்துப் பார்த்தால் தலையங்கமே இதயக் கோயில் தலைப்பு.
என் நாவல் தலைப்பை யார் வைத்திருப்பார்கள்? நெஞ்சு படபடக்கப் படித்தேன். என் நாவலுக்குப் பரிசு கிடைத்திருக்கும் செய்தியைத் தாங்கி இருந்தது. யுனிவர்சிடியில் டெப்டி சீப்பாக வேலைவாய்ப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் கணவர் ராஜரத்தினத்திற்குப் போனில் அங்கிருந்தே சொன்னேன்.
அச்சமயம் நா. பார்த்தசாரதி, என் கணவர் எதிரே இருந்திருக்கிறார். வாழ்த்துச் சொன்னதுடன் பார்ட் பேமெண்டா, முழுசா என்று கேட்டார். அதாவது பரிசு முழுசாக ஒரே நாவலுக்கா? இரண்டு நாவலுக்கா என்று பொருள்.
என் ஒரே நாவலான இதயக் கோயிலுக்குத்தான்
என்று சொன்னேன்.
இலக்கிய நயத்தோடு வாழ்க்கையை ஒட்டி எழுதும் நா.பார்த்தசாரதி எனக்குப் பிடித்த எழுத்தாளர். அவரிடமிருந்து முதல் வாழ்த்து எனக்குக் கிடைத்தது பெருமையாக இருந்தது.
இது நடந்த இரண்டு தினங்களில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த திரு மொரார்ஜி தேசாயை வரவேற்றுப் பாராட்டும் ஒரு விழா. எனக்கு அழைப்பு வந்தது. விழா ராஜாஜி ஹாலில். நானும் என் கணவரும் கீழே படியேறி வரும் சமயம், மேற்படியில் நின்றிருந்த நா.பா. அவர்கள் அகிலனிடம் எனக்குப் பரிசு கிடைத்த விபரத்தைச் சொல்ல, இருவரும் ஓடிவந்து பாராட்டியதை என்னால் மறக்க முடியாது.
கலைமகளிலிருந்து எனக்குப் பரிசு கொடுக்கப்பட்டிருப்பதைப் பற்றிக் கடிதமே வரவில்லை. முதல் வரிசையில் கி.வா.ஜ. அமர்ந்திருந்தார். நமஸ்கரித்தேன். ஆசிர்வாதத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பொருள் பொதிந்த புன்னகை புரிந்தார்.
எனக்கு முன்னால் தகவல் வரவில்லையே
என்றேன்.
திடீர்னு பார்த்ததினாலே ஏற்பட்ட திகைப்பும், மகிழ்ச்சியும் தனி இல்லையா? அதனாலேதான் எழுதல. இன்னிக்கு வாழ்த்து மடல் அனுப்பி இருக்கிறேன்
என்றார்.
வாழ்த்து மடல் கிடைத்தது. அவரும் முருக பக்தர். நானும் முருகபக்தை. இதயக் கோயில் அவருடன் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. உனக்கு இவ்வளவு திருப்புகழ் தெரிந்திருக்கிறதே
என்று கூறி என்னை உட்காரவைத்துப் பாடச்சொல்லும் அளவுக்கு வளர்ந்தது எங்கள் நட்பு. இது எனக்குப் பெருமைதானே?
இதயக் கோயில் நாராயண ஸ்வாமி அய்யர் பரிசு நாவல். திரு. நாராயண ஸ்வாமியின் மனைவி வயதானவர். இரண்டு இதழ் இதயக் கோயிலைப் படித்துவிட்டு முழுக் கையெழுத்துப் பிரதியையும் தன் பேரன் திரு. நாராயண ஸ்வாமியை(ரவி)க் கொண்டு தரச்சொல்லி படித்தாராம். என்னைப் பார்க்க வேண்டும் என்று பேரனிடம் சொல்லி வீட்டிற்கு அழைத்தார். ‘சுபத்ராவைப் போலவே பொறுமையாகவும், அடக்கமாகவும் இருக்கிறாய்’ என்று ஆசிர்வதித்தார்.
உடனே என் கணவர், நான் துரை இல்லை பாட்டி
என்று சற்றுச் சிரிக்க வைத்தார். இந்த ஆசிர்வாதங்கள் எனக்குப் பொக்கிஷம் ஆகும்.
கலைமகளின் சார்பாக நாவல்களைப் படித்தவர் எல்.ஆர்.வி. என் நாவலை முடிவு செய்து கொடுத்தபின்பு விக்ரமன் அவர்களிடம் எல்.ஆர்.வி பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் யார் என்று, அவருக்கு எதுவுமே என்னைப் பற்றித் தெரியாது. என்னைப் பற்றி விக்ரமனிடம், பர்த்தாவுக்குப் ப்ரீதியுடையவளாக, குடும்பத்தில் பற்றுக்கொண்டு அனுசரணையாக இருக்கக் கூடிய ஒரு பெண்ணால்தான் சுபத்ராவைப்போல் ஒரு பெண்ணைப் படைத்திருக்க முடியும்
என்று கூறி இருக்கிறார்.
விக்ரமன் என்னைப் பற்றிக் கூறி இருக்கிறார். என்னைச் சந்திக்க ஆவலாக இருந்த எல்.ஆர்.வியின் வீட்டிற்கு நவராத்திரி அன்று கணவர், மகளுடன் போனேன். என் பெண் ராஜஸ்யாமளாவை பார்த்தவுடன் லா.ச.ரா எழுதிய ஜனனி என்று புகழ்ந்துச் சொன்னார். பரிசுக்குரிய நாவல்களை அவர்கள் வீட்டினரும் படித்திருந்தனர். வரிக்கு வரி இதயக் கோயிலைப் பற்றி அவர்கள் சொன்னபொழுது நான் அடைந்த இன்பம், புது வெள்ளத்திற்கு ஒப்பானது.
எனக்கு எல்.ஆர்.வி என்ற ஸ்ரீவித்யா உபாசகரான எழுத்தாளருடன் அறிமுகம் கிடைத்தது இதயக் கோயிலால்தான்.
ஏற்கனவே அறிமுகமான மாயாவி திருச்சி வானொலியில் வேலை பார்த்து வந்தவர். கதையைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
கல்கி ராஜேந்திரன், நானும் என் கணவரும் நல்லியில் நுழையும்போது பார்த்துவிட்டு ஓடோடி வந்து இதயக் கோயிலைப் பற்றிப்பேசியதை என்னால் மறக்க முடியாது.
தினமணிக்கதிர் ஆசிரியர் கே.ஆர். வாசுதேவன் இதயக் கோயிலைப் படித்துப் பாராட்டிவிட்டு, கதிரில் தொடரும் கதைகளும் எழுத வாய்ப்பு கொடுத்தார். சாண்டில்யன் எனக்கு மாமனார் போன்றவர். என் கணவரை அவர் எதிரே கொஞ்சம் நகர்ந்து உட்காருங்க என்றுகூட சொல்லமுடியாது. என் கணவர் மூன்று எம்.ஏ., பி.எல் பட்டதாரி.
ஆபிஸ்ல போனா அவரைக் க்யூவிலதான் நின்னு பார்க்கணும். அவரை நீ என் முன்னாடியே விரட்டுனியா?
என்று சிரித்தபடி என்னை கண்டிப்பார்.
சாண்டில்யன் தண்டபாணித் தெருவில் ஒரு ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ரிக்ஷா நிற்பதற்குள் சின்னப்பையன் போல குதித்து இறங்கிவிட்டார். இதயக் கோயிலை வரிக்கு வரி பாராட்டினார். இப்படி ஓடற ரிக்ஷாவிலே இருந்து குதிக்கலாமோ என்று கோபித்துக் கொண்டேன். உன் இதயக் கோயில் அவ்வளவு நள்ளாயிருக்கேம்மா
என்றார். அப்படி வயதையும் பொருட்படுத்தாமல் இறங்கிப் பாராட்ட எப்படிப்பட்ட உயர்ந்த மனம் வேண்டும்!
(சமீபத்தில் ஒரு மீட்டிங்கில் அவர் மகன் சடகோபன் சிறப்பு விருத்தினராகப் பங்கேற்றார். யாரோ ஒரு பேச்சாளர் நான் எங்கோ பேசிய திருப்புகழ் கருத்துக்களைக் குறிப்பிட்டு அங்கு மேடையில் பேசியதை எனக்குத் தொலைபேசியில் சடகோபன் சொன்னார்) வரிக்கு வரி பாராட்டி எனக்கு இப்புகழ் கிடைக்க என்னுடன் துணையாய் இருந்த என் கணவரை நினைத்துக் கொள்கிறேன். இப்பொழுது அவர் இல்லை. ‘சுமங்கலியாகப் போன சுபத்ராவுக்கு சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணுவோம்’ என்று கேட்டவர் அவர்.
என் பெண் ராஜஸ்யாமளா இன்னும் துரையை நினைத்துப் பரிதாபப்பட்டுக் கொண்டு இன்னும் பேசுகிறாள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மோதும் இதயக் கோயில் நினைவலைகள் மூலம் கி.வா.ஜ. அவர்களுக்கும், கலைமகள் காரியாலயத்திற்கும் பலமுறைகள் நன்றி! நன்றி! நன்றி!
1
வேண்டாத மனைவி
நாதசுர இசை, கோயிலை நிறைத்துக்கொண்டு இனிமையைத் தன் குழலின் வழியே கொட்டிப் பிரவகித்தது. பெண்களின் பட்டுப் புடவைகள் சரசரத்தன. அவற்றின் மீது தெளித்திருந்த சென்டின் நெடியும் பீரோவடியில் வைக்கும்போது போட்டிருந்த ஃப்ளவர் டஸ்டின் மெல்லிய நறுமணமும் கலந்து மணத்தன. பெண்களின் அலங்கார வண்ணங்களின் கதம்பக் கொத்து, கண்களுக்கு விருந்தாயிற்று. பார்வை பெண்கள் பக்கம் மொய்த்தது. பெண்கள் இளைஞர்களோடு கண்களாகிய கணைகளைத் தொடுத்துப் பேசினார்கள். அந்த நிலையில் வாய்ப் பேச்சுக்கள்
தேவையில்லையே!
கரகர ப்ரியா கரகரவென்று ஒலிக்கவில்லை. காதுக்கு இனிமையாக, சக்கனி ராஜாவைத் தேனுடன் பால் கலந்தாற்போல உருக்கி ஊற்றிக்கொண்டிருந்தது. நாதசுரக் கச்சேரி தொடர ஊர்வலம் கிளம்பிவிட்டது. பெண்களின் கரங்களில் வெற்றிலை, பாக்கு, பருப்புத் தேங்காய், பூ, பழம் போன்ற மங்களப் பொருள்களுடன், சர்க்கரை, கற்கண்டுத் தட்டுக்களும் இருந்தன. வாழைப் பழத்துக்காக அவர்களைச் சுற்றிச் சுற்றி வரும் குழந்தைகளின் தட்டா மாலை ஓட்டங்கள்; பெண்கள் வண்ண உடைகளில் காரின் பின்னால் வரும்போது அள்ளித் தெளித்த பூக்கள், ஒன்றாகக் குவிந்ததுபோல் ஓர் அழகுச்செண்டு, சக்கனி ராஜாவுடன் ஊர்வலம் நகர்ந்து போயிற்று.
காரின் முன்னால் சென்ற கூட்டம் விரல் சொடுக்கில் தாளக் கணக்குடன் கானத்துக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கனகச்சிதமான ஸ்வரங்கள், நிறுத்தங்கள், ஆலாபனையின் உச்ச ஸ்தாயிப் பிடிப்புக்கள். உடல், தலை எல்லாம் அசைந்தன. ஒவ்வோர் இடமாக நின்று நின்று கிளம்பிற்று ஊர்வலம். ராகமாலிகை ஒன்றின் இணைப்பில் தன்யாசியும், வசந்தாவும் குழலின் வழியே கூடிப் பிரிந்தன. ஸ்வரத்தில் மாறி வரும்போது கண்ணாமூச்சி ஆட்டம் ஸ்ஹானாவும், சாமாவும் சரிய விளையாடின. தெருமுனை ஒன்றில் கல்யாணி அடம்பிடித்துச் சதிராடியது. ஆலாபனை முடிந்து பாடலை எடுக்கும்போது மெதுவாக ஊர்வலம் கிளம்பி நகர்ந்தது. காரைப் பார்த்து நின்றுக்கொண்டிருந்த நாதசுரக் கோஷ்டியும் தெருவைப் பார்த்துத் திரும்பி மெதுவாக நகர்ந்தது.
நாத வெள்ளத்தில் தெருவே அமைதியாய்க் கிடந்தது. தெருவோரத்து வீடுகளில் மாப்பிள்ளையைப் பற்றி விமரிசனம், சம்பிரதாயம் தெரிந்தவர்கள் காரை நிற்க வைத்து எடுக்கும் ஆரத்தி. நடுநடுவே நண்பர்கள் கேலியாக மாப்பிள்ளையின் காதுகளில் ஓதும் இனிய மொழிகள் இவற்றைச் சுமந்துக்கொண்டு கார் மீண்டும் கிளம்ப எத்தனித்து, வழி கேட்க டிரைவர் அடிக்கும் குழல் ஒலி; அழும் குழந்தை அடம்பிடித்துக் கீழே இறங்கச் செய்யும் முயற்சி; வாழைப் பழத்தைக் கொடுத்துச் சமாதானம் செய்யும் தாய் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்.
ஓய்வு பெற்ற கலெக்டர் வேணுகோபாலன், தம் ஒரே பெண்ணுக்குத் திருமணம் செய்கிறார். வசதியானவர். தம் கண்களைப்போல் காத்து வளர்த்த, தாயற்ற மகளான சுபத்திராவுக்குத் திருமணம் நன்றாக நடைபெறவேண்டும் என்று பல ஆயிரங்களை லட்சியமின்றி இறைக்கிறார். திருமணத்தில் ஒரு சிறு குறைகூட இருக்கக்கூடாது என்ற நியாயமான ஆசை. அன்றையத் தினத்தைப் போலவே அவள் நிறைவான மகிழ்வோடு என்றும் இருக்க வேண்டும் என்ற தந்தைக்குரிய பாசமான நினைவுகள். அந்த நினைவுகளின் எழுச்சி நெஞ்சில் இடம்பெறத் தன் மனத்தின் வாழ்த்துதல் நிறைவேற வேண்டும் என்று தம் குலதெய்வமான தணிகை வேலனை வேண்டிக் கொள்கிறார். இந்தத் திருமணம் நடைபெற்றதும் தம்பதியைத் திருத்தணிக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டும் அவருடைய பிரார்த்தனையோடு மட்டுமின்றி முதல் வேலையும் அதுதான்.
ஒரே செல்வ மகளைத் திருமகளாகச் செல்வத்தில் புரள வைத்துவிட்டார். அதேபோல் அவளுக்கு வாய்க்கும் கணவன் வீட்டினரும் அப்படி வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலை. மருமகன் ரங்கதுரையும் அப்படியே வைத்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கை அவர் நெஞ்சில் குடிக் கொண்டிருந்தது. ரங்கதுரையின் நினைவு நெஞ்சில் எழுந்ததுமே, காரில் அவன் மாப்பிள்ளைக் கோலத்தில் வரும் அழகைப் பார்க்க வேண்டும்போல் தோன்றிற்று. ஊர்வலத்தின் முன்னால் சென்றுக் கொண்டிருந்தவர். ஓர் ஓரமாக நின்றுவிட்டார். தம்முடைய ஒன்றுவிட்ட சகோதரன், ஓய்வு பெற்ற நீதிபதி சோமசுந்தரத்துடன் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கூடக் கவனிக்கவில்லை. அவருடைய பார்வை துரையின் மேலேயே லயித்திருந்தது.
கார் அவர் நின்றிருந்த இடத்தைத் தாண்டிப் போயிற்று. துரையின் நிறைந்த அழகு அவர் மனத்தைக் கொள்ளைக் கொண்டது. கண்கள் பனித்துவிட்டன. சொல்லத் தெரியாத நெகழ்ச்சி. சுபத்திராவின் தாயை நினைத்துக் கொள்கிறார். அழகும், படிப்பும் நிறைந்த தம்முடைய செல்வ மகளுக்கு இணையாகக் கிடைத்திருக்கும் துரையைப் பார்க்கத் தம் மனைவி இல்லையே!
கண்ணீர் திரை, பார்வையை மறைக்கத் துரையைப் பார்க்கிறார். ஆஜாநுபாகுவான சிவந்த உடலுக்குக் கறுப்பு நிறப் பேன்ட்டும், அதே கலர் கோட்டும் எடுப்பாக இருந்தன. அடக்க அடக்க அடங்காமல் அடம் பிடிக்கும் குழந்தைத் துள்ளலாக நெற்றியில் புரளும் கேசச் சுருள்கள்; அதை அவன் அலட்சியமாக இடக்கையால் தள்ளிவிடும் லாவகம். சிவந்த இதழ்களின்மேல் கறுத்த வரம்பு கட்டிய இளமீசை; கன்னத்தில் காதோரப் பகுதியில் அடர்த்தியாக ஒட்ட வைத்ததுபோல் புசுபுசுத்த கிருதா; ஆனால் அளவாக இருந்தது. கண்கள், மனம் எல்லாம் நிறைவை எய்தியதும் உடலில் சிறிது தளர்ச்சி தோன்றியது வேணுகோபாலனுக்கு.
என்னடா வேணு, இங்கேயே நின்னுட்டே? அங்கே சோமசுந்தரம், சீனு எல்லாம் உன்னைக் காணோம்னு தேடிண்டு நிக்கறா. நன்னா நின்னே தனியா, போ
என்று அக்கா ஸ்ரீமதி கேட்டுக்கொண்டே வந்தாள்.
ஒண்ணுமில்லேக்கா, இங்கேயிருந்து துரையைப் பார்த்தேன். நம் சுபத்திராவுக்கு ஏற்றவன். ஒண்ணுக்கொண்ணு எத்தனை நன்னா அமைஞ்சு போச்சு?
போதும்டா, ஊர்வலம் முன்னாடி போறது, நீயும் போ. உன் கண்ணே பட்டுடப் போறது. ஆமா, சாமான் அறைச் சாவியை நீ கொண்டு வந்துட்டியா? அங்கே சமையல்காரர் சாமான் எடுக்க முடியாமல் திண்டாடறார். கொண்டா சாவியை.
சாவியை வாங்கிக்கொண்டு போனாள் ஸ்ரீமதி. கணவனை இழந்து குழந்தைகளும் இன்றித் தனிமரமாக வந்த ஸ்ரீமதியைத் தம்முடனேயே நிறுத்திக் கொண்டார் வேணுகோபாலன். பொறுப்பை ஏற்றுக்கொள்ளவே வந்தாற்போல் தாயை இழந்திருந்த சுபத்திராவைக் கண்ணாக வளர்த்து வர ஆரம்பித்தாள். வாழ்க்கையில் ஒரு பிடிப்புக் கிடைத்தது. திருமணம் முடிந்ததும் சுபத்திரா ரங்கதுரையுடன் போய் விடுவாளே என்று எண்ணும்போதே பிரிவின் துயரம் அவள் மனத்தை அசைத்தது. வளர்த்த பாசம்! வேணுகோபாலனை அவள் ஏதோ சொல்லி விரட்டினாளே தவிர, அவள் மனம் துரையின் அழகைப் பார்த்துப் பெருமிதம் அடையச் சிறிதும் தவறவில்லை. கடமையை நன்கு நிறைவேற்றிய பூரிப்பு, பாரம் எடுத்த வண்டியாகச் சுமையின்றிக் கிடந்தது.
ஒரு பெண் பிறந்ததுமே, அவள் வேறு ஒரு வீட்டுக்குச் சொந்தமானவளாகப் போய்விடுவாள் என்ற உண்மை தெரிந்தும், பிரிவின் நேரம் வரும்போது மனத்தை வருத்தும் இனிய நினைவுகள். அவள் மூலமாகக் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற மங்களகரமான வாழ்த்துக்களை நெஞ்சம் எப்போதுமே இசைத்துக் கொண்டிருக்கிறது. அவள் நின்ற இடம், மெதுவாக முனகிக்கொண்ட பிடித்தமான ட்யூன்கள், கை கொள்ளாமல் சரிந்து அலைய வைக்கும் சிரிப்பு அலைகளின் ஆரவாரம், பிடித்தமானவற்றைக் கேட்டுப் பிடிவாதமாக வாங்கிக்கொள்ளும் குழந்தைத்தனம், எல்லாம் அவளிடம் இருந்தன. அருவி தன்னிச்சையாய்க் கொட்டுவது போன்ற ஒரு கலகலப்பில் மற்றவர்களைக் கவனிப்பதில்லை. இவை எல்லாம் எப்படி மாறப் போகின்றனவோ என்ற
கவலை இளங்கொடியாக வளர்ந்து நெஞ்சில் படர்ந்தது ஸ்ரீமதிக்கு.
அவள் மட்டும் விலக்கா? ஆனால் சுபத்திராவைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. தன்னை உணர்ந்துக்கொண்டு அளவாகப் பேசி நயமாகப் படிந்துபோகும் குணமுள்ள பெண். வேணுகோபாலனுக்கு இந்தக் கவலைகள் எல்லாம் ஏற்படவில்லை. சுபத்திராவுக்குத் தந்தையாகக் கல்வியைத் தந்து, அவள் வளர்ச்சியைக் கண்டு பூரித்து, அறிவின் வளர்ச்சியில் அதை விளக்கும்போது அதில் தோழமையைப் படரவிட்டு, குறைகள் கண்டபோது அதை நிவர்த்தி செய்து, பங்கு பெற்றவர் அவர் வேணுகோபாலன் கவலையெல்லாம் துரையைப் பற்றியே. அந்தத் தணிகைக் குமரனே மருமகனாக வந்தாற்போல் அவர் அவனது கருணையை நினைத்து உருகினார். கண்ணுக்கு அழகானவனாக மட்டும் அவருக்குத் துரை தோன்றவில்லை; கருத்தை நிறைவிக்கும் அறிவுச் செல்வனாகவும் அவன் தோன்றினான்.
சென்னை நகரத்திலேயே புகழ்பெற்ற டாக்டர்களில் ஒருவனாகப் பணத்தை வாரிக் குவிக்கும் திறமை பெற்ற கைராசிக்கார டாக்டராக விளங்கினான் துரை. அரசாங்க மருத்துவமனையில் பணிபுரியும்போதே அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வைத்திய மகாநாடு ஒன்றில் கலந்துகொள்ளத் திறமைமிக்க டாக்டர் என்ற முறையில் இவனையே தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். கருத்தரங்கு மகாநாட்டுடன் ஓராண்டுப் பயிற்சியும் சேர்ந்து கொண்டது. இத்தனை சிறு வயதில் அயல்நாடு சென்று வந்து எத்தனை புகழைப் பெற்று விட்டான்!
அவனைச் சம்மதிக்க வைப்பதற்குள் எத்தனை நடை நடக்க வேண்டியிருந்தது வேணுகோபாலனுக்கு! இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை.
அவனுக்கு இப்போது கல்யாணத்தில் நாட்டமில்லை. இராப் பகலாத் தொழில்தான் கவனம். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தது முதல் ஆராய்ச்சிப் பைத்தியந்தான் பிடித்துக் கொண்டிருக்கிறது
என்ற துரையின் தந்தை ராமநாதன், வேணுகோபாலனை அவன் நர்ஸிங் ஹோமிற்கு அழைத்துச் சென்றார்.
துரை அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், அவனுடைய ஆசைப்படி கட்டிய நர்ஸிங்ஹோம் வீட்டிலிருந்து, சற்றுத் தள்ளி அதே காம்பெளண்டுக்குள் கம்பீரமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க வேணுகோபாலனின் ஆசை இன்னும் வளர்ந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம் துரை அரசாங்க மருத்துவமனைக்குச் செல்ல மாடியிலிருந்து, கோட்டு தோளில் புரள, அலட்சியமாக இறங்கி வந்தான்.
ராமநாதன் அவனை வேணுகோபாலனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்போ அரசாங்க மருத்துவமனையில் கெளரவ டாக்டர். புற்றுநோய், ட்யூமர் அது இதுன்னு ஏதோ தீஸிஸ் ஆராய்ச்சிதான். எனக்கு என்ன தெரியறது இது எல்லாம்? ஏதோ உடம்பு சரியில்லேன்னா மருந்து மாத்திரை தருவான், அவ்வளவுதான்.
வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே பேசுவார் ராமநாதன்.
இரண்டொரு நிமிஷங்கள் மரியாதையை உச்தேசித்து உட்கார்ந்த துரை, நீங்கள் அப்பாவுடன் பேசிக் கொண்டிருங்கள். எனக்கு நேரமாகிவிட்டது. நாம் பிறகு சந்திக்கலாம்
என்று விடைபெற்றுக் கொண்டான்.
வேணுகோபாலனின் ஆசை மரமாகவே வளர்ந்து தழைத்து விட்டது. துரைக்கும், சுபத்திராவுக்கும் முடிச்சைப் பலமாகப் போட்டுவிட்டது, அவர் மனம். ராமநாதன் பிடிகொடுத்துப் பேசாதபோதும் அதை ஏற்காமல் மீண்டும் மீண்டும் போய் வற்புறுத்துவார் வேணுகோபாலன். உடல்நலம் இல்லாத நண்பர்களுக்கெல்லாம்கூடத் துரையிடம் போய் வைத்தியம் பார்த்துக்கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி அனுப்புவார். இரண்டொரு நண்பர்களுடன் அவரும் அவனுடைய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். துரையைக் காண வேண்டும் என்ற ஆசைதான் காரணம். பெண்ணைப் பெற்றால் எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது! நேரிலேயே அவனுடைய திறமையையும், கூட்டத்தையும் காணும்போது மீண்டும் ராமநாதனிடமே போவார், சம்மதம் கேட்க...
ஏதோ ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தம் மகள் சுபத்திராவுடன் வந்திருந்த வேணுகோபாலன், அங்கே வந்திருந்த ராமநாதன், அலமு அம்மாளுக்குச் சுபத்திராவை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகம் நல்ல பலனைத் தந்தது. சுபத்திரா இத்தனை அழகாக இருப்பாள் என்று அலமு அம்மாள் நினைக்கவே இல்லை. அவளுடைய சாந்தம் தவழும் அழகும், பொம்மை போன்ற நளினமான உடல்வாகும் அலமு அம்மாளைக் கவர்ந்தன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அறிமுகமான நபர்களிடம் ரோஜாச் செண்டாகத் தலையசைப்பையும், தாமரை மொக்காகக் கைகளைக் குவித்து அழகாகச் சிரிக்கும் அடக்கத்தையும் கண்டாள் அலமு அம்மாள்.
வேணுகோபாலன் கல்யாண விஷயமாக வற்புறுத்திய போதெல்லாம், ‘ஏதோ தொந்தரவு செய்கிறார், பாவம்’ என்ற தோரணையில் இருந்தாள் அலமு அம்மாள். ஆனால், சுபத்திராவை நேரில் பார்த்த பிறகோ...!
துரைக்கு எப்படியும் சுபத்திராவை முடித்துவிடத்தான் வேண்டும்
என்று காரில் வீட்டுக்குத் திரும்பும்போது இனிமேலும் அடக்கி வைக்க முடியாது என்பதுபோல் அலமு அம்மாள் ராமநாதனிடம் கூறினாள்.
அவளைத் திரும்பிப் பார்த்த ராமநாதன், பதில் பேசவில்லை. ‘துரையை எப்படிச் சம்மதிக்க வைப்பாய்?’ என்ற கேள்வி அவர் கண்களில் மிதந்ததை அவள் புரிந்துக்கொண்டாள். அவளால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை.
ஆனால் பிடித்த பிடியை நிறைவேற்றிய லட்சிய ஆசை வேணுகோபாலனை இன்னும் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்க வைத்தது.
காம்போதி கைலாயத்தையே எட்டிப்பிடிப்பது போன்ற லாகவத்தில் பஞ்சமத்திலேயே சஞ்சாரம் செய்துமேல் ஸ்தாயி ரி, கா, பா, ம, கா, ஸரீக கா கா வை வட்டமிட்டுத் தொட்டுவிட்டுக் கீழே இறங்கிவிட்டது. ராக தேவதைகளின் நளின நடனம், காற்றிலே ஆடும் மூங்கில் மொய் என ஒலிப்பதுபோல் துள்ளிக் கிறங்க வைத்தது. அந்தத் துள்ளலின் எதிரொலி, தன் வீட்டில் தனியறையில் உட்கார்ந்து கனவு காணும் மணப்பெண் சுபத்திராவின் உள்ளத்தில் ஒலித்தது. அது காம்போதியோ, காந்தார ஸ்வரமோ இல்லை. அவள் நெஞ்சில் ரங்கதுரை என்ற இதய ராகந்தான் பாடியது. அவள் சங்கீதத்தின் விரோதி அல்ல. ஆனால் அவள் இதயத்தில் குடிகொண்டு ஆட்டிப் படைக்கும் மகிழ்ச்சியின் எல்லைக்குள் சங்கீதத்தால் நுழைய முடியவில்லை.
அவளைச் சுற்றிச் சாமான்கள் இறைந்து கிடந்தன. போட்டி போட்டுக்கொண்டு அந்த அறையில் அலங்காரம் செய்துக்கொண்ட பெண்கள் சூடியிருந்த பூக்கள் உதிர்ந்து கிடந்தன. பெளடர் தரையில் உதிர்ந்து கிடந்தது. சுபத்திராவின் தோழிகளுக்கு மாப்பிள்ளை துரையைக் காண வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவல். சுபத்திரா துரையின் புகைப்படத்தை அவர்களிடம் காட்டியிருந்தாள். நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அத்தனைபேர்களும் சுபத்திராவைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
அத்தை ஸ்ரீமதி அவளுக்குத் துணையாக இருந்தாள். சாமான் அறைச் சாவி வேணுகோபாலனிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தது. சமையக்காரர் நெய்யும் சர்க்கரையும் கேட்க, ஸ்ரீமதி தன் சகோதரனைத் தேடிக்கொண்டு ஊர்வலத்தை எதிர்க்கொண்டு போய்விட்டாள். அவளும் நின்று நின்று துரையின் எழிலையும் ஊர்வலம் நகரும்போது வெடிக்கும் வாண வேடிக்கையையும் ரசித்துக்கொண்டே நகர்ந்தாள். அதனால் சுபத்திரா தனியாக எல்லாருடைய கேலிகளிலிருந்தும் தப்பி துரையின் நினைவில் நனைந்து பேரானந்தத்தில் இருந்தாள்.
நாதசுர ஓசை துக்கடாப் பாடல்களை இசைத்துக்கொண்டு வருவது மிக அருகில் கேட்டது. ஊர்வலம் வீட்டை நெருங்குகிறது என்பதைப் புரிந்துக்கொண்ட சுபத்திராவுக்கு உள்ளங்கைகள் வேர்வையில் நனைந்தன. தனிமை! அவளுக்குத் தேவைதான். அது, உள்ளத்தில் ஊறும் ஆசைக் கனவுகளை முகம் சொல்லி விடுமே! சிதறிக் கிடந்த பூவிதழ்களைத் திரட்டி ரங்கதுரை - சுபத்திரா என்று எழுதினாள் அவள். மேலே சுழலும் மின் விசிறியின் சுழற்சிகூடத் ‘துரை’ என்று கூறுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்தியது. தனிமையில் நினைவுத் துணைச் சுற்றிக்கொண்டு ஓடும். அவளுக்குத் துணை இந்தப் பூவெழுத்துக்கள் தாமோ? இதற்குமுன் அவன் யாரோ, அவள் யாரோ? அவர்கள் இணைய ஓர் ஒப்பந்தமாகத் திருமண நிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. மெய்சிலிர்க்க அவனை நோக்கியே மனம் தாவுகிறதே! அவனும் அவளையே நினைத்துக் கொண்டிருப்பானோ?
சுபத்திரா சிரித்துக் கொண்டாள். அப்பொழுது மட்டுந்தானே அந்தப் பூவெழுத்துக்கள் துணை? இனி என்றுமே துணை அவன்தானே? மறுநாள் எல்லார் எதிரிலேயும் அந்தத் துணையை மந்திரங்களின் சாட்சியோடு ஏற்றுக்கொள்ளப் போகிறாள். அவளுடைய நெஞ்சக் கடலில் மோதும் அனுராகம் அவன் நெஞ்சைத் தொடவேண்டும். அவளே அவனுக்கு அனுராகமாக மாற வேண்டும். அதில் அந்த நாணத்தின் மென்மையான சுகம் மணக்கும், அவளை நினைக்கும்போதே அவன் நெஞ்சில் சுகமான புல்லரிப்பு ஏற்பட வேண்டும்.
அவனுடைய சிரிப்பு, பேச்சு எல்லாமே அவளுக்குத் தென்றல்தான். கரத்தின் வளைவில் இடை சாய்த்து, அந்தத் தென்றலில் தவழும் கொடியாகக் கண்கள் மூடித் தன்னை மறந்து அவனுடைய கொஞ்சலால் மெய்மறக்க ஊசலாட வேண்டும். இப்படியெல்லாம் அவள் கற்பனை விரிந்த குடையாய் நின்றபோது உடம்பே கீழே இல்லாமல் ஜிவ்வென்று பறக்க வேண்டும்போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. ‘இத்தனை பேர் எதற்குக் கூட வேண்டும் தங்களுக்குத் தடையாக?’ என்று இன்ப எரிச்சல் மனத்தில் எழுந்தது.
நினைவுத் தொடர்ச்சி மீண்டும் கட்டுக்கடங்காமல் பொங்கியது. திருமணச் சடங்குகள் முடிந்தபிறகு, இரவு அவள் அவனுடன் தனிமையில் உறவாட ஏற்படுத்தப்பட்ட இனிமையான நேரம். ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் கைகோத்த வண்ணம் வாழ்க்கைப் பாதையில் நடக்கத் தங்களையே தயார்ப்படுத்திக் கொள்ளக் கிடைக்கப்போகும் சந்தர்ப்பம். அவள் என்ன பேசப் போகிறாள்? அவன் என்ன கேட்கப் போகிறான்? இதென்ன, வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போட்டியா? இல்லை, பேட்டியா?
சினிமாக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. நிலவொளியில் செடி கொடிகளில் புகுந்து ‘டூயட்’ பாடவா போகிறாள்? அவனுடைய உணர்ச்சிகளைப் புரிந்துக்கொண்டு ருசிக்கும், தேவைக்கும் தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ள முயல வைக்கும் நாள். ‘பூ மணக்கும், பொன் கனக்கும், போதும், போதும்’ என்று சொல்ல மனம் வராத இனிமையைத் தரும் பொற்காலத்தின் ஏடுகளாகப் புரளப் போகும் நாளின் ஆரம்பம். சொல்லித் தெரியப் போவதில்லை. கரையைத் தொடும் காற்றின் அலைகளாக அவள் அன்பு வெள்ளம் அவனை வணங்க வேண்டும். அவனையே தள்ளும் வெள்ளத்தின் வருடலாக இது இருக்கக் கூடாது.
நினைக்க நினைக்கக் கள்ளுண்டவன் கொண்ட போதையாகத்தான் இருந்தது அவளுக்கு. அவளைப் பொறுத்தவரையில் நினைவுக்கு ஒரு தடையோ, எல்லையோ இல்லை. எல்லையினுள் அடக்கி வைக்கும் அன்பு அல்ல அவளுடையது. எல்லை காண இயலாத கடல் அது. புதிதாகப் படிக்கப் போகும் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அழகு பார்ப்பதுபோல் இருந்தது. அந்த நேரம், வரப்போகும் நிமிஷம் ஒவ்வொன்றும் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கம். மலர வேண்டிய நுண்கலைகள் அதைப் படிக்கப்போகும் தலைவனோ?
மன்னி, எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு.
தனிமையில் ரங்கதுரை என்னும் போதையில் மூழ்கிக் கிடந்த சுபத்திராவிடம் புதுப் பாவாடை கவிந்த குட்டையைப்போல் விரியப் பட்டுப்பூச்சியாக வந்து உட்கார்ந்தாள் அனு. சுபத்திராவின் குட்டி நாத்தனார். பெண் பார்க்க ரங்கதுரையின் வீட்டினர் வந்தபோது, அனுவும் உடன் வந்திருந்தாள். அந்தப் பழக்கத்தில் எழுந்த சகஜமான பேச்சு. தன்னிடமிருந்து தனியான சலுகைகளை எதிர்பார்க்கும் சிறு மனத்தின் தவிப்பை உணர்ந்தாள் சுபத்திரா.
எனக்குந்தான் என் அனுகுட்டியை ரொம்ப ரொம்பப் பிடிச்சுருக்கு
என்று கூறியவளாக அனுவை இழுத்து அணைத்துக் கொண்டாள். ரங்கதுரையையே பார்ப்பதுபோல் ஓர் இனிமை பரவசமாக எங்கும் நிறைந்தது. அருகிலிருந்த ஸ்வீட் பாத்திரத்திலிருந்து ஒரு ஸ்வீட் துண்டை எடுத்து அனுவிடம் நீட்டினாள். ஆயிரம் ஆயிரம் பிகு பண்ணிக்கொண்டு, அனு அதை வாங்கிக் கொண்டாள். உடம்பு எட்டு வளைசல் வளைந்தது.
ஆனால்...
என்று இழுத்தாள் அவள்.
ஆனா என்ன அனு? சும்மா சொல்லு. நான் தப்பா நினைக்கவே மாட்டேன். இன்னொரு ஸ்வீட் வேணுமா?
தன்னையும், துரையின் குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துக்கொண்டு உரிமை பாராட்டும் வேகம் அவள் பேச்சில் அவசரமாகத் தொனித்தது.
‘வேண்டாம்’ என்பதுபோல் தலையை வேகமாக ஆட்டியபோது இரட்டைப் பின்னல்களுடன் பூச்சரங்களும், காது வளையமும் வேகமாக ஆடின.
எனக்கு உங்களைப் பிடிச்சு என்ன பண்ணறது? எங்க அண்ணாவுக்கு உங்களைப் பிடிக்கணுமே?
என்று பெரிய மனிதத் தோரணையில் கையை அலட்சியமாக ஆட்டியபடி சொன்னாள் அனு.
என்ன சொல்கிறாய் அனு? உங்க அண்ணாவுக்கு என்னைப் பிடிக்கணுமா? ஏன் அனு, நான் அழகாக இல்லையா?
என்று உறுத்தலை மறைத்தவாறே, கேலியாகப் பேசினாள் சுபத்திரா. தன்னைப்பற்றி அவர்கள் வீட்டில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தாள்.
குழந்தை மனம் கள்ளங் கபடு இல்லாதது. யாரிடம் என்ன சொல்வதென்று சில சமயங்களில் தெரியவில்லை.
நீங்க ரொம்ப அழகா இருக்கிறீர்கள் மன்னி
என்று சுபத்திராவின் கரத்தை வருடிய அனு, வசந்தா அக்காகூட அடிக்கடி ‘மன்னி ரொம்ப அழகா இருக்கா, இல்லையா?’ன்னு கேட்டுண்டே இருப்பாள். ஆனா இனிமே நீங்கதான் வீட்டுக்கு வந்து அண்ணாவின் மனசை மாத்தணும்னு அம்மா சொல்லிண்டே இருக்கா. அண்ணா அமெரிக்காவுக்குப் பயிற்சிக்குப் போனபோது எலிஸாவைக் காதலித்தானாம். இப்பக்கூட உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கவேயில்லை. மாப்பிள்ளை அழைப்புக்குக்கூட வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சான். அம்மாதான் அழுது பிடிச்சுச் சம்மதிக்க வச்சா
சுபத்திரா அடித்து வைத்த சிலையாகிப் போனாள். அவள் நினைத்ததுபோல் அடி எடுத்து வைக்கப்போகும் பாதை மலர்க்குவியல் அல்ல, போராட்டப் பாதைதான். அவளை அறியாமல் உடலில் பதற்றம் ஏற்பட்டது. அப்பாவிடம் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்தி விடலாமா?
அப்பாகூடச் சொன்னார். ‘இனிமே துரை நன்னா மாறிடுவான், சுபத்திரா அவனை மாத்திடுவாள்’னு
அனு தன் போக்கில் பேசிக்கொண்டு போனாள்.
அவளைப்பற்றி அவர்களுக்கு எத்தனை நம்பிக்கை! வருவதற்கு முன்பே சுமையைத் தூக்கி முதுகில் வைக்கும் ஓர் உரிமை. இந்தச் சிறு பெண்ணின் குழந்தைத்தனமான பேச்சை எத்தனை தூரம் நம்புவது? சம்மதம் இல்லாமல்
தன் வாழ்வைப் பாழ் செய்துகொள்வானா ஒருவன்?
எதையெல்லாமோ தவறிச் சொல்லிவிட்டவளாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் அனு. பிறகு மன்னி, நான் எதையோ சொன்னேன். இதை யார்கிட்டேயும் நீங்க சொல்லாதீங்கோ ஏன்னா உங்களைப் பார்த்ததும் சொல்ல வேண்டும்போல் தோணித்து
என்றாள். போகிற போக்கில் ஸ்வீட்
பாத்திரத்தில்