Oorpidaari
By Kavipithan
()
About this ebook
எப்போதேனும் வழி தவறி வந்து போகிற ஒற்றை மழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது எனது மண். அதன் மடியில் சுரக்கும் ஒற்றை ஊற்றுக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.
பாலாறும், பொன்னை ஆறும் நுரைத்தோடிய எங்கள் மாவட்டம், இன்று கருத்த பாம்புகளைப் போல நெளிந்து நெளிந்து ஓடும் தோல் கழிவு நீரின் முகம் பார்த்து முகம் பார்த்து மூச்சுத் திணறி கிடக்கிறது.
மாளாத தாகத்தோடு தவித்த எமது பாட்டன்களைப்போல இருபுறமும் கைகளை விரித்து மல்லாந்து படுத்துக் கிடக்கிறது பொன்னை ஆறும், அணைக்கட்டும். ஆந்திர மாநிலத்தின் வஞ்சனையால் எங்களைப் போலவே செயலற்றுக் கிடக்கிறது எங்களது ஆறும். இதன் கரையில் செழித்திருந்த எமது ஊரின் இளசுகள் இன்று ஏர் கலப்பைகளின் வாசம் அற்று, காதில் இடுக்கிய கைப்பேசிகளோடு பக்கவாதக்காரர்களைப் போல கழுத்தைக் கோணிக் கொண்டு வாகனங்களில் பறக்கிறார்கள் இரும்புத் தொழிற்சாலைகளையும், ரசாயணத் தொழிலகங்களையும் நோக்கி.
இந்த மண்ணில் பிறந்தாலும் இதனோடு ஒட்டவும் முடியாமல், விலகவும் ஒப்பாமல் ஓடுகிறது எனது நாட்கள்.
எனது இடுக்கி சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகும், அதன் தொடர்ச்சியான சில நிகழ்வுகளுக்குப் பின்னரும், மேடு பள்ளங்களையெல்லாம் சமமாக்கி விடுகிற ஒரு பெரு மழையைப்போல எழுதிக் குவித்துவிடவேண்டும் என்கிற என் எண்ணங்கள் எங்கள் மண்ணை நெருங்கும் மழையைப் போலவே மாறிவிடுகிறது. என்றாலும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும் சில பெருமழை மனசுகள் என்னை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
வெயிலுக்கும், வறட்சிக்கும் பெயர் பெற்றிருந்தாலும் எனது மண் அதன் ஈரத்தை இன்னும் இழக்கவில்லை. காய்ந்த பூமியிலும் நீரைத் தேடித் தேடி சேமித்து வைத்திருக்கிற தண்ணீர் முட்டான் கிழங்குகளைப் போல வாஞ்சையை சேமித்து வைத்திருக்கிறார்கள் எனது மனிதர்களும்.
நா மணக்க, காதினிக்கப் பேசும் பிற வட்டாரத் தமிழுக்கு இணையாக மணக்கிறது எங்கள் தமிழும். வந்து கொண்டு இருக்கிறாயா என்பதை "வந்துகினு கீறியா' என்றும், தின்று விட்டாயா என்பதை 'துண்டியா' என்றும் சுறுக்கெழுத்தைப்போல சுறுக்குத்தமிழ் பேசிய எம் மக்களின் அவசரம் மற்றவர்களுக்குக் கேலியாகக் கூட இருக்கலாம்.
வற்றாத நதிப் பாசனங்களுக்கு வக்கற்றுப் போனதால், மாடு பூட்டி கவலை இரைப்பும், புகை கக்கும் ஆயில் இன்ஜின் பாசனுமுமாய் அல்லாடிய எம் மக்கள், கேழ்வரகு, கம்பு வரப்புகளுக்குள் ஓடி ஓடி மடை திருப்புகிறபோது பயிர் மறைப்பில் இருப்பவரைப் பார்த்து கேட்க முடியுமா? “எங்கே இருக்கிறாய் என்கிற முழுமையான வார்த்தைகளை? "எங்க கீற? தானே வரும்.
எனவே எனது கதை மனிதர்களும் இதையேதான் பேசுகிறார்கள். இந்த வேகமான வார்த்தைகள் வேகமான வாசிப்புக்குத் தடையாகக் கூட இருக்கலாம். வேறு வழியில்லை நண்பர்களே. மனிதர்களின் வாழ்க்கை அவர்களது மொழிகளில் தானே வாழ்கிறது.
மேகம் சுரக்கிறபோது பெய்துவிடும் மழையைப் போல, மனசு கனக்கிறபோது எழுதிவிடுகிற என்னால், அவற்றை இதழ்களுக்கு அனுப்பி வைக்கிற முனைப்பை காட்ட முடிவதில்லை. நண்பர்கள் புல்வெளி செ.காமராசன், கம்பீரன், மு.முருகேஷ் ஆகியோரின் முயற்சியால் இத்தொகுப்பில் உள்ள கதைகள் வெவ்வேறு இதழ்களில் அச்சாகி உள்ளன.
அவர்களுக்கும், இதழ் ஆசிரியர்களுக்கும், இந்த தொகுப்பை அழகு மிளிர வெளியிட்ட பாரதி புத்தகாலயம் நிறுவனத்திற்கும், தட்டச்சு செய்த கோ.பழனி மற்றும் அச்சக நண்பர்களுக்கும் ஈரமான நன்றிகள்.
எனது நிறைகளோடும், குறைகளோடும் என்னை அமைதியாய் ஆமோதிக்கிற துணைவி தே.மஞ்சுளா, எப்போதும் புதுப்புது வாசல்களைத் திறந்து விடுகிற எனது குழந்தைகள் ஓவியா, சிந்து, நிலவழகன், எனது பெற்றோர் மு.கண்ணன், சக்கரவேணியம்மாள், உடன் பிறந்தோர் க.நரசிம்மன், க.வேணுகோபால், க.சுந்தரமூர்த்தி, க.கோமதி, க.ஜானகி ஆகியோருக்கும் நன்றி சொல்வது ஒரு பூ மலர்வதைப்போன்ற மகிழ்வை உண்டாக்கலாம்.
இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு உங்களுக்குள் தோன்றும் எதை வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். தாகம் எடுத்த மண் உப்பு நீரையும் குடிக்கும், கழிவு நீரையும் குடிக்கும், மினரல் வாட்டரையும் குடிக்கும். தாகத்தோடு காத்திருக்கிறேன். நன்றி!
பிரியங்களுடன்
கவிப்பித்தன்
Read more from Kavipithan
Idukki Rating: 0 out of 5 stars0 ratingsPinangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oorpidaari
Related ebooks
Kaakka Choru Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsChapparam Thokki Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsArivippu Rating: 0 out of 5 stars0 ratingsVidhai Cholam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Thedum Vithigal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Aval Chinna Penna? Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Ennattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSaalaparinthu... Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Thanimaiyin Vemmaiyum Thaniyadha Vetkaiyum Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 0 out of 5 stars0 ratingsSingapoorukku Sila Kazhuthaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oorpidaari
0 ratings0 reviews
Book preview
Oorpidaari - Kavipithan
http://www.pustaka.co.in
ஊர்ப்பிடாரி
Oorpidaari
Author:
கவிப்பித்தன்
Kavipithan
For more books
http://www.pustaka.co.in/home/author/kavipithan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
எளிய மக்களின் வாழ்க்கை
வேண்டும் ஒரு பேய் மழை
அத்திப்பூ செண்பகம்
சிப்பாய் கணேசன்
சாவு பஜனை
ஊர்ப்பிடாரி
திருட்டு இலுப்பை
ஆயிரம் காலத்துப் பயிர்
பாப்பாரப்பூச்சி
ரெட்டக்குண்டி
வேதாளங்களின் உலகம்
வலிகள்
சிலுவை சுழி
முட்களில் பூக்கும் மலர்கள்
பாப்பாத்தீ
ஐஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம்
சிர் மணி
எளிய மக்களின் வாழ்க்கை
எழுத்து வாழ்வை, சமூகத்தை பிரதிபலிக்கும் அரியதொரு ஊடகம். மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள். காலங்கள் மேகங்களைப் போல கடந்து கொண்டிருக்கின்றன. எல்லா காலத்துக்கும் சாட்சியாக பூமியைப் போல நிலைத்திருப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே. காலம் சில எழுத்துக்களை கல்வெட்டுக்களாக மாற்றிவிடுகிறது. அவையே இலக்கியமாகவும் நிலைபெற்று காலம் காலமாக மனிதர்களுக்கு அம்மொழி சார்ந்த வரலாற்றை, கலாச்சாரத்தை, பண்பாட்டை கைமாற்றித் தரும் காரியத்தை செய்கின்றன. அதே போல மொழியால் செய்யப்படும் எல்லா படைப்புகளும் இலக்கியமாகி விடுவதில்லை. வெண்பாக்களானாலும், விருத்தங்களானாலும், ஆசிரியப்பாக்களானாலும், காவியமானலும், காப்பியங்களானாலும் அது தான் எடுத்துக்கொண்ட வடிவத்தின் முழுமை கொள்ளும் விதத்தால் மட்டுமே இலக்கியம் எனும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றன. பின் அவை பாடுபொருள் நிமித்தமும் காலத்தை கையகபடுத்திய விதத்தாலும், கற்பனை செறிவாலும் தரவேறுபாட்டைக் கொள்கின்றன. இதைத்தான் தொல்காப்பியமும் நன்னூல்களும் நமக்கு பயிற்றுவித்து வந்துள்ளன.
இந்த சூத்திரங்கள் மரபிலக்கியத்தோடு முடிந்துவிட்டன. ஆனால் மேற்கு வரவான புதுக்கவிதை, சிறுகதை, நாவல் போன்ற புதிய வடிவங்களுக்கு என்ன இலக்கணம் என்று யாரும் வரையறுக்கவில்லை. காலத்தின் சிறந்த சிறுகதைகளும், கவிதைகளும், நாவல்களும் அதற்கான வடிவம் குறித்து நமக்குள் திட்டமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தந்திருக்கின்றன.
ஒரு வாசகனாக சிறுகதை மூலம் நான் பெறுவது ஒரு அக தரிசனம். படைப்பெனும் சிறுதுளை வழியாக நான் அனுபவத்தின் சாரத்தை உள்வாங்குகிற போது பெரும் விசாலத்தை அகம் எதிர்கொள்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளை வாசிக்கிற போது என் கால்கள் சட்டென உயரமாகி ஆகாயத்திலிருந்து மக்களை அவர்களது காரணமற்ற அபத்தமான வாழ்வை அவதானிக்க முடிகிறது. கு.பா. ராவிடம் கண்ணுக்கு புலப்படாத பெண்களின் அக உலகத்தை ஜூம் இன் செய்து பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. மவுனியை படிக்கும்போது உடலுக்கும் வெளிக்குமான சமன்பாட்டை உணரமுடிகிறது. இவைகளின் மூலமாக நான் வாழ்வின் பன்முகத்தை புரிந்து இயற்கை என்மீது விதித்திருக்கும் விலங்குத்தன்மையை உடைத்து முழுமை பெற்றவனாக மாறுகிறேன்
சிறுகதைகள் இவ்வாறாகத்தான் என்னை வளர்த்து வந்திருக்கின்றன. மட்டுமல்லாத தமிழிச்சூழலையும் வளர்த்து வந்து சாகா வரம் பெற்ற இலக்கியங்களாகவும் சிறுகதைகளின் இலக்கணங்களாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.
இந்த வரிசையிலிருந்துதான் நான் கதைகளை மதிப்பீடு செய்கிறேன். கடந்த ஆண்டில் ஒருநாள் வேலூர் த.மு.எ.க.ச. சார்பாக நடத்தப்பட்ட கவிப்பித்தனின் முந்தைய முதல் சிறுகதை தொகுப்பான இடுக்கி விமர்சனக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தேன்.
அதற்காக அவரது கதைகளைப் படித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்படாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்தது. இதை அக்கூட்டத்திலும் வெளிப்படுத்தியிருந்தேன். அழகிய பெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்தனின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக அம்மக்களது வாழ்வை நெருக்கமாக காண்பித்தது.
இக்காரணங்களால் இந்த அவரது இரண்டாவது தொகுப்பிற்கான முன்னுரைக்காக கவிப்பித்தன் தொலைபேசியில் அழைத்த போது உடனடியாக சம்மதித்தேன். வாசித்தவுடன் சட்டென மனதில் பட்டது இதுதான் 'முந்தைய தொகுப்பிலிருந்த தீவிரத்தன்மை இத்தொகுப்பிலும் குறையாமல் எழுதியிருக்கிறார்'. ஊர்ப்பிடாரி தொகுப்பின் அனைத்து கதைகளையும் ஒரு சேர வாசித்து முடிக்கிறபோது சக படைப்பாளியாக அவருக்கு நான் சொல்ல விரும்புவதாக பட்டது இந்த வடிவம் குறித்த சிறு மெனக்கெடல்தான். உண்மையில் நான் வாசித்த முந்தைய தொகுப்பிலும் சரி, இந்தத் தொகுப்பிலும் சரி, அவரது கதைகள் மீது, வாழ்வனுபவங்கள்மீது ஒரு கள்ளத்தனமான பொறாமையே உண்டாகும் அளவிற்கு ஈர்ப்பை, வசீகரத்தை உண்டாக்கி விடுகிறார்.
குறிப்பாக ஊர்ப்பிடாரி கதை நவீன கதைத்தன்மைக்கான கூறுகளுடன் சிறப்பாக வடிவம் பெற்றிருகிறது. 'ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக' எனும் சொலவடை பரவலாக வட மாவட்ட கிராமங்களில் பெண்கள் புறம்பு பேசும்போது பயன்படுத்துவார்கள். இதர கதைகள் அனைத்தும் அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறபோது இக்கதை அவரது அதீத கற்பனையில் உருபெற்றிருப்பதால் சட்டென ஒரு ஈர்ப்பையும் சுவாரசியத்தையும் தன்னுள் தக்கவைத்துக் கொள்கிறது.
இக்கதை கற்பனையின் உச்சம் என்றால் அனுபவத்தின் உச்சமாக உருவாக்கம் கொண்டிருக்கும் கதை சிப்பாய் கணேசன். கிராமத்து பேச்சு மொழியின் கொச்சைத்தன்மையோடு, அவர்களது மனோபாவத்துடன் மிக நெருக்கமாக அவர்கள் உலகத்தில் மண் திண்ணையில் அமரவைத்து நம் முன் காட்சிபடுத்தி மனதை பாரமாக்கிவிடுகிறார். இக்கதையில் சிறுவனின் அக உலக சித்திரிப்பு சிதையாமல் அதேசமயம் பெரியமனிதர்களின் அசிங்கங்களையும் வாசகர்கள் உணரும் விதமாக கவிப்பித்தன் கோடிட்டு காட்டும் இடங்களில் நல்ல சிறுகதையாளராக அங்கீகாரம் பெறுகிறார்.
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் அவனது அப்பா கணேசன். தான் வாங்கிவந்த பிராந்தி பாட்டிலில் கொஞ்சம் எடுத்து சிறுவனின் அம்மாவுக்கு கொடுக்க, ஆரம்பத்தில் வேணாம் வேணாம் என மறுத்துக்கொண்டே அவசரமாய் வாங்கிக் குடித்துவிட்டு சிறுவனை அவள் முத்தமிடும் காட்சியில் நம் மனம் பாத்திரங்களின் உலகத்தோடு ஒன்றி சங்கமித்து விடுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பின் மூன்றாவது கதை சிலுவைசுழி.
இக்கதையின் நாயகன் ஒரு சிறுவன் கிறித்துவக் கோயிலின் திருவிழா முடிந்த மறுநாள் காலையில் அங்கு சென்று எங்காவது காசு கிடைக்குமா எனத் தேடும் அவனது பாதையில் விரியும் இக்கதை ஒரு வகையில் நீதி போதனைக் கதையாக தெரிந்தாலும் இறுதிக்காட்சியில் அது நம்மை நெகிழவைத்து பெரும் அனுபவத்துக்குள் அமிழ்த்தி விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
மேற்சொன்ன மூன்று கதைகள் மூலம் இத்தொகுப்பு ஒரு சிறந்த சிறுகதை தொகுப்புக்கான மதிப்பை பெறுகிறது.
மற்றும் திருட்டு இலுப்பை, பாப்பராப்பூச்சி, ஐஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம், முட்களில் பூக்கும் மலர்கள் போன்ற கதைகளும் இத்தொகுப்பில் குறிப்பிடத்தகுந்த கதைகளாக இடம் பெற்றிருக்கின்றன. இக்கதைகள் எளிமையான மனிதர்களையும், அவர்களது அறியப்படாத துயரங்களையும், வெக்கை மிகுந்த அவர்களது வாழ்க்கைகையையும் நமக்குக் காட்டுவதில் முழு வெற்றியைப் பெறுகின்றன. ஆனாலும் அதே சமயத்தில் இவையனைத்தும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக இருக்கிற போது இன்றைய நடைமுறை கிராம வாழ்க்கையின் அவலங்களிலிருந்து கவிப்பித்தன் தப்பித்து ஒரு வசதியான இடத்திலிருந்து கிராம வாழ்க்கையை அவதானிக்கிறாரோ என்னும் ஐயம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. நூறுநாள் வேலைத்திட்டம், இலவச தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்சிகள் மூலம் கிராமக்கள் வருங்காலத்தில் சந்திக்கப் போகும் பெரும் ஆபத்துக்கள் குறித்த சிந்தனையை இன்றைய கிராமத்துக் கதைகள் கோரி நிற்கின்றன. மேற்சொன்னவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மயக்க ஊசிபோல கிராமத்து மக்களை போலி உற்சாகத்துக்கு அழைத்துச் செல்வதாக இருக்கின்றன. நகர மக்களின் திடீர் வசதி பெருக்கத்திற்கு விலையாகவும் விளைநிலங்களை பிடுங்கி வருவதற்கு மாற்றாகவும்தான் இந்தச் சலுகைகள் என்பதை நாம் உணர்த்த வேண்டிய கட்டாயம் இன்று எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கிறது.
இனிவரும் கதைகளில் கவிப்பித்தன் இதனையும் கணக்கிலெடுக்க வேண்டும் என விரும்புகிறேன். மற்றபடி ராஜேந்திரசோழன், ஜி. முருகன் அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன், காலபைரவன் போன்ற வடமாவட்ட எழுத்தாளர்களின் கிராமத்து கால்களின் தடத்தையொட்டி கவிப்பித்தன் தன் கதைகள் மூலம் இலக்கிய உலகில் தன் தடத்தையும் இத்தொகுப்பின் மூலம் அழுந்த பதியவைக்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தொடர்ந்து அவர் தனது கதைகளை முன்னெடுத்து செல்லும் பாதையில் வரும் காலத்தில் ஆகச்சிறந்த கதை சொல்லியாக வளரவும் என் வாழ்த்துக்களை கூறுகிறேன்.
சூன், 2012
அஜயன்பாலா
சென்னை
*****
வேண்டும் ஒரு பேய் மழை
எப்போதேனும் வழி தவறி வந்து போகிற ஒற்றை மழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது எனது மண். அதன் மடியில் சுரக்கும் ஒற்றை ஊற்றுக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.
பாலாறும், பொன்னை ஆறும் நுரைத்தோடிய எங்கள் மாவட்டம், இன்று கருத்த பாம்புகளைப் போல நெளிந்து நெளிந்து ஓடும் தோல் கழிவு நீரின் முகம் பார்த்து முகம் பார்த்து மூச்சுத் திணறி கிடக்கிறது.
மாளாத தாகத்தோடு தவித்த எமது பாட்டன்களைப்போல இருபுறமும் கைகளை விரித்து மல்லாந்து படுத்துக் கிடக்கிறது பொன்னை ஆறும், அணைக்கட்டும். ஆந்திர மாநிலத்தின் வஞ்சனையால் எங்களைப் போலவே செயலற்றுக் கிடக்கிறது எங்களது ஆறும். இதன் கரையில் செழித்திருந்த எமது ஊரின் இளசுகள் இன்று ஏர் கலப்பைகளின் வாசம் அற்று, காதில் இடுக்கிய கைப்பேசிகளோடு பக்கவாதக்காரர்களைப் போல கழுத்தைக் கோணிக் கொண்டு வாகனங்களில் பறக்கிறார்கள் இரும்புத் தொழிற்சாலைகளையும், ரசாயணத் தொழிலகங்களையும் நோக்கி.
இந்த மண்ணில் பிறந்தாலும் இதனோடு ஒட்டவும் முடியாமல், விலகவும் ஒப்பாமல் ஓடுகிறது எனது நாட்கள்.
எனது இடுக்கி சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகும், அதன் தொடர்ச்சியான சில நிகழ்வுகளுக்குப் பின்னரும், மேடு பள்ளங்களையெல்லாம் சமமாக்கி விடுகிற ஒரு பெரு மழையைப்போல எழுதிக் குவித்துவிடவேண்டும் என்கிற என் எண்ணங்கள் எங்கள் மண்ணை நெருங்கும் மழையைப் போலவே மாறிவிடுகிறது.
என்றாலும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும் சில பெருமழை மனசுகள் என்னை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
வெயிலுக்கும், வறட்சிக்கும் பெயர் பெற்றிருந்தாலும் எனது மண் அதன் ஈரத்தை இன்னும் இழக்கவில்லை. காய்ந்த பூமியிலும் நீரைத் தேடித் தேடி சேமித்து வைத்திருக்கிற தண்ணீர் முட்டான் கிழங்குகளைப் போல வாஞ்சையை சேமித்து வைத்திருக்கிறார்கள் எனது மனிதர்களும்.
நா மணக்க, காதினிக்கப் பேசும் பிற வட்டாரத் தமிழுக்கு இணையாக மணக்கிறது எங்கள் தமிழும். வந்து கொண்டு இருக்கிறாயா என்பதை "வந்துகினு கீறியா' என்றும், தின்று விட்டாயா என்பதை 'துண்டியா' என்றும் சுறுக்கெழுத்தைப்போல சுறுக்குத்தமிழ் பேசிய எம் மக்களின் அவசரம் மற்றவர்களுக்குக் கேலியாகக் கூட இருக்கலாம்.
வற்றாத நதிப் பாசனங்களுக்கு வக்கற்றுப் போனதால், மாடு பூட்டி கவலை இரைப்பும், புகை கக்கும் ஆயில் இன்ஜின் பாசனுமுமாய் அல்லாடிய எம் மக்கள், கேழ்வரகு, கம்பு வரப்புகளுக்குள் ஓடி ஓடி மடை திருப்புகிறபோது பயிர் மறைப்பில் இருப்பவரைப் பார்த்து கேட்க முடியுமா? எங்கே இருக்கிறாய் என்கிற முழுமையான வார்த்தைகளை?
எங்க கீற? தானே வரும்.
எனவே எனது கதை மனிதர்களும் இதையேதான் பேசுகிறார்கள். இந்த வேகமான வார்த்தைகள் வேகமான வாசிப்புக்குத் தடையாகக் கூட இருக்கலாம். வேறு வழியில்லை நண்பர்களே. மனிதர்களின் வாழ்க்கை அவர்களது மொழிகளில் தானே வாழ்கிறது.
மேகம் சுரக்கிறபோது பெய்துவிடும் மழையைப் போல, மனசு கனக்கிறபோது எழுதிவிடுகிற என்னால், அவற்றை இதழ்களுக்கு அனுப்பி வைக்கிற முனைப்பை காட்ட முடிவதில்லை. நண்பர்கள் புல்வெளி செ.காமராசன், கம்பீரன், மு.முருகேஷ் ஆகியோரின் முயற்சியால் இத்தொகுப்பில் உள்ள கதைகள் வெவ்வேறு இதழ்களில் அச்சாகி உள்ளன.
அவர்களுக்கும், இதழ் ஆசிரியர்களுக்கும், இந்த தொகுப்பை அழகு மிளிர வெளியிட்ட பாரதி புத்தகாலயம் நிறுவனத்திற்கும், தட்டச்சு செய்த கோ.பழனி மற்றும் அச்சக நண்பர்களுக்கும் ஈரமான நன்றிகள்.
எனது நிறைகளோடும், குறைகளோடும் என்னை அமைதியாய் ஆமோதிக்கிற துணைவி தே.மஞ்சுளா, எப்போதும் புதுப்புது வாசல்களைத் திறந்து விடுகிற எனது குழந்தைகள் ஓவியா, சிந்து, நிலவழகன், எனது பெற்றோர் மு.கண்ணன், சக்கரவேணியம்மாள், உடன் பிறந்தோர் க.நரசிம்மன், க.வேணுகோபால், க.சுந்தரமூர்த்தி, க.கோமதி, க.ஜானகி ஆகியோருக்கும் நன்றி சொல்வது ஒரு பூ மலர்வதைப்போன்ற மகிழ்வை உண்டாக்கலாம்.
இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு உங்களுக்குள் தோன்றும் எதை வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். தாகம் எடுத்த மண் உப்பு நீரையும் குடிக்கும், கழிவு நீரையும் குடிக்கும், மினரல் வாட்டரையும் குடிக்கும். தாகத்தோடு காத்திருக்கிறேன். நன்றி!
பிரியங்களுடன்
கவிப்பித்தன்
*****
அத்திப்பூ செண்பகம்
வடவாண்டை மேட்டு வெள்ளச்சி நிலத்தில் கேழ்வரகு நடவு நட்டுக் கொண்டிருந்த மொட்டச்சி கால் சேற்றைக்கூட கழுவாமல் விழுந்தடித்து ஓடினாள்.
மொட்டச்சி மக ஒட்டந்தழய அரச்சித் துண்ணுட்டாளாங்
என்று ஊரே பற்றிக்கொண்டது.
மொட்டச்சிக்கு ஓட ஓட பாதை நீண்டு கொண்டே போனது. வரப்பு, கால்வாய், கல், மண் தெரியாமல் ஓடினாள். மொக்கப்பல்லனின் நீட்டுத்துண்டின் வரப்பில் விழுந்து முழங்கை தேய்த்துக் கொண்டது. விழுந்த வேகத்தில் எழுந்து ஓடினாள்.
மோட்டூர்க்காரி வெள்ளச்சியின் நடவுக்கு மாத்தாளாகப் போனவள், மதியக் கூழ் குடித்துவிட்டு வந்து ஒரு மனைதான் ஏறினாள்.
செம்பகம், நாம் பெத்த மவளே
என்று அடித்தொண்டையில் கதறியபடி ஓடியவள், செண்பத்தின் வீட்டை நெருங்கும்போதே கும்பல் கண்ணில்பட, ஈரக்குலை பதற, உச்சத்தில் கதறினாள்.
வீட்டின் முற்றத்தில் செண்பகம் அலங்கோலமாய் கிடக்க, பெண்களும், ஆண்களும் சூழ்ந்து, ஆளாளுக்கு கத்திக்கொண்டும், அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தனர். பக்கத்து வீட்டு மாரியம்மாள் பனை ஓலை விசிறியால் செண்பகத்தின் முகத்தில் விசிறிக் கொண்டிருந்தாள்.
அய்யோ என்ன பெத்த மகளே... இப்பத்தானே பாத்து பேசிட்டு போனேன்... அதுக்குள்ள பெத்த வயித்தில நெருப்ப வாரிக் கொட்டிட்டியே
என்று மகளை வாரிக் கட்டிக்கொண்டு கதறினாள் மொட்டச்சி.
கத்திக் கொண்டிருந்த குழந்தையை செண்பத்தின் மாமியார் தோளில் போட்டுக் கொண்டு அரற்றிக் கொண்டிருந்தாள்.
நுரை தள்ளிய வாயோடு, கண்கள் நிலைக்குத்தி நிற்க, பேச்சு மூச்சின்றி கிடந்தாள் செண்பகம்.
ராவு பகலா பாடம் சொல்ற மாரி சொன்னனே... எம் பேச்ச கேக்காம இப்டி பண்ணிட்சே
என்று பதைத்துக் கொண்டிருந்தான் செண்பகத்தின் கணவன் சின்னராசு.
உள்ள போன தய வெளிய வந்திட்சினா காப்பாத்திடலாம். ஒரு சொம்புல துணி சோப்ப கரச்சி எட்தாங்க
என்றார் சஞ்சீவி ரெட்டியார்.
செண்பகத்தின் நாத்தனார் கோமதி பின் பக்கம் ஓடினாள். எவர்சில்வர் சொம்பு நிறைய்ய கரைத்த சோப்புத் தண்ணீரைக் கொண்டுவந்து சஞ்சீவி ரெட்டியாரிடம் கொடுத்தாள்.
சூழ்ந்திருந்தவர்களை தூர விரட்டிவிட்டு, நாராயண ரெட்டியார் செண்பத்தின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு, அவள் வாயைப் பிளக்க, சஞ்சீவி சோப்புத் தண்ணீரை வாயில் ஊற்றினார். வாயில் நிரம்பிய நீர் கீழே வழிந்ததே தவிர உள்ளே இறங்கவில்லை.
கன்னத்தில் தட்டினார். தலையை ஆட்டினார். துளி கூட இறங்கவில்லை. மீண்டும் குய்யோ முய்யோ என்று பெண்கள் கதறத் தொடங்கினர்.
இதெல்லாம் ஒன்னும் கேக்காது... பீ கரச்சி எட்த்துகினு வாங்க... அத ஊத்திப் பாக்கலா
என்றார் நாராயண ரெட்டியார்.
மொட்டச்சி ஒரு அலுமினிய குண்டானைத் தூக்கிக்கொண்டு ஏரிக்கரைக்கு ஓடினாள். ஊராரின் ஒட்டுமொத்த மலமும் அங்குதான் கிடந்தது. காய்ந்து கருவாடானது, மண் பூத்து மூடியது, அரைகுறையாய் காய்ந்தது என விதவிதமாய் கலந்து கிடந்தது. அன்று காலையில் கழித்த மலமாகப் பார்த்து நான்கு குவியல்களை மண்ணில்லாமல் அள்ளி குண்டானில் போட்டுக் கொண்டாள்.
குடல் வரை நுழைந்த நாற்றம் மூச்சை அடைத்தாலும் மொட்டச்சிக்கு அதெல்லாம் உரைக்கவில்லை. கைகளைக்கூட துடைத்துக் கொள்ளாமல் குண்டானைத் தூக்கிக் கொண்டு ஓட்டமாகத் திரும்பினாள்.
கூட்டம் இவளுக்காகவே காத்திருந்தது. கோமதி தண்ணீர் தவலையைத் தூக்கி