Manitha Gundugalum Marana Vandigalum
()
About this ebook
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் ஆகியன பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவர் தமிழாக்கம் செய்துள்ள நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மிகவும் குறிப்பிடத்தக்கது. பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
Read more from S. V. Rajadurai
Irelandin Porattam Desiyamum Socialismum Rating: 0 out of 5 stars0 ratingsKal Theppam Rating: 0 out of 5 stars0 ratingsFrankfurt Marxiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsUchangalin Yugam Rating: 0 out of 5 stars0 ratingsSinthikkum Naanal Rating: 0 out of 5 stars0 ratingsAugust 15 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manitha Gundugalum Marana Vandigalum
Related ebooks
Kaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Engengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Kanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsJaithukonde Iruppen Rating: 0 out of 5 stars0 ratingsKalagakaara Kalaingargal Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsVazhvenum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsAaiyram Kagitha Kokkugal Rating: 0 out of 5 stars0 ratingsTasmac Echarikkai Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsThe Sadness of Geography (Tamil Edition): My Life as a Tamil Exile Rating: 0 out of 5 stars0 ratingsDinasari Moondru Kolaigal Rating: 5 out of 5 stars5/5Enna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Sakalakala Babu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsThimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Murintha Ambugal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2018 Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Kaali Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2019 Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsThanimanitha Thiyagam Naattirkum Veettirkum Rating: 0 out of 5 stars0 ratingsVidyasaagaram Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2024 Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Manitha Gundugalum Marana Vandigalum
0 ratings0 reviews
Book preview
Manitha Gundugalum Marana Vandigalum - S. V. Rajadurai
http://www.pustaka.co.in
மனித குண்டுகளும் மரண வண்டிகளும்
Manitha Gundugalum Marana Vandigalum
Author:
எஸ்.வி.ராஜதுரை
S. V. Rajadurai
For more books
http://www.pustaka.co.in/home/author/sv-rajadurai
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கார்ட்டூன் உலகிலிருந்து மெய்யுலகத்திற்கு
நமக்கு அறிமுகமான முதல் மனித குண்டுகள்
புடாவின் வண்டி
தொழில்நுட்ப வளர்ச்சியும் கார் குண்டுகளும்
ஜியோனிஸ பயங்கரவாதமும் கார் குண்டுகளும்
ஏகாதிபத்தியமும் மாஃபியா கும்பல்களும்
கறுப்புச் சரக்கு
கார் குண்டுகளின் சர்வதேசியம்!
பயங்கரவாதத் தொழில்நுட்பமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்
'ஏழைகளின் வான்படை'
வெள்ளை இனவெறியர்களும் கார் குண்டும்
கெரில்லாப் போரின் அணு ஆயுதம்
இராக்: எரியும் நரகம்
'இஸ்லாமியவாதம்', 'பயங்கரவாதம்', அமெரிக்க ஏகாதிபத்தியம்
நாகரிகங்களின் மோதல்?
'பயங்கரவாதியின்' உருவாக்கம்
தலிபான்
ஜனநாயகமும் இஸ்லாமியவாதிகளும்
நவீனத்துவம், அறிவொளி மரபு, மதச்சார்பின்மை
ஏகாதிபத்தியமும் அரசியல் இஸ்லாமும்
பாக்தாத்: ஒரு உருவகம்
முன்னுரை
கார் குண்டுகளைப் பற்றி அமெரிக்க மார்க்ஸிய அறிஞர் மைக் டேவிஸ் எழுதியுள்ள நூலொன்றினை அறிமுகப்படுத்தும் கட்டுரையொன்றை எழுத விரும்பினேன். அப்படி எழுதத் தொடங்கியபோது, மனித (தற்கொலை) குண்டுகள் பற்றியும் 'இஸ்லாமிய பயங்கரவாதம்' எனச் சொல்லப்படுவது பற்றியும் எழுதப்பட்டுள்ள வேறு சில நூல்களையும் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனவே, மைக் டேவிஸின் நூலில் சொல்லப்படாத, அதில் சொல்லப்பட்டுள்ளவற்றுடன் தொடர்புடைய வேறு சில விஷயங்களைப் பற்றியும் எழுதலாமே எனச் சில நண்பர்கள் ஆலோசனை கூறினர். அதற்குச் செவிமடுத்ததால், எனது கட்டுரை நீண்டுகொண்டே போய், ஒரு முழுப் புத்தகத்தின் அளவுக்கு வளர்ந்துவிட்டது. பல்வேறு வகையான போராளி அமைப்புகளைப் பற்றி இந்த நூல் பேசினாலும், ‘இஸ்லாமிய பயங்கரவாதம்' என்னும் அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேலிய ஏகாதிபத்தியச் சொல்லாடல்களைப் புரிந்து கொள்வதற்காக, முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த போராளிகளால் நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றிய செய்திகளுக்கும் விளக்கங்களுக்குமே அதிகப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தப் போராளிகளின் வழிமுறைகள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், அவை தோன்றியதற்கான அரசியல், வரலாற்றுக் காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையை நம்மால் தவிர்க்க முடியாது. உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்திய அரசும் அதன் ஐரோப்பிய, இஸ்ரேலியக் கூட்டாளிகளும் தான் என்பதை மீண்டுமொருமுறை நினைவுபடுத்துகிறது இந்த நூல். பயங்கரவாதம், சோசலிசப் புரட்சிக்குப் பகையானது என்பதையும் எடுத்துக்காட்ட மார்க்ஸிய விளங்கங்களை இந்த நூலில் சேர்க்க விரும்பினேன். ஆனால், நூலின் விரிவஞ்சி அதனைச் செய்யவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் அது குறித்து எழுதும் விருப்பம் எனக்கு உள்ளது.
இந்த நூலினை வெளியிட முன்வந்த சுதீர் செந்திலுக்கும்
ஏறத்தாழ ஓராண்டுக் காலம் நான் திருச்சியில் வசித்த போது பல்வேறு வகைகளில் தோழமையையும் அன்பையும் குறைவில்லாமல் வழங்கி வந்த அன்புத் தோழர்கள் நந்தலாலா, பொன்னிதாசன், மு.பாண்டியராஜன், சு.துளசிதாசன், சுஜாதா, த.கனகசபை, சு.வெங்கடேசன், க.புவனசேகர், ஆ.ஆரோக்கியராஜ், ந.கருணாகரன் பிலிப் சுதாகர், நாடக இயக்குனர் முத்துவேழலகன், எல் ஏ சாமி, கிறிஸ்டினா ஆகியோருக்கும்
எப்போதும் எனது அருமை ஆசானாக இருந்துவரும் வ.கீதாவுக்கும் பாசத்தாலும் பரிவாலும் எனக்கு உளத் தெம்பை ஊட்டிவரும் தோழர் இன்குலாப் அவர்களுக்கும் என் அன்புத் துணைவி சகுவுக்கும்
என் நன்றி.
எஸ்.வி.ராஜதுரை
*****
புலரி-மீரா-பாபு
ஆகியோருக்கு
*****
மனித குண்டுகளும்
மரண வண்டிகளும்
*****
கார்ட்டூன் உலகிலிருந்து மெய்யுலகத்திற்கு
ஹாலிவுட் திரைப்படம் 'சூப்பர் மேன்' தமிழகத் திரைப்பட இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் வந்த 'சூப்பர்மேன்-2,3,4 தொடர்வரிசைப் படங்களுக்கும் கிராக்கி இருந்தது. தமிழில் 'டப்பிங்' செய்யப்பட்டது அதற்கு முக்கியக் காரணம். சிடி, டிவிடிக்களில் அவை கிடைக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுகின்றன. 'சூப்பர்மேன்' காமிக்ஸ் (சித்திரக்கதை) புத்தகங்கள் அமெரிக்கச் சிறுவர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தன. உலகிலுள்ள எல்லாத் தீமைகளையும் வென்று வரக்கூடிய ஒரு 'அசகாய சூரன்' அமெரிக்க மக்களின் கூட்டுமனத்தால் எப்போதும் விரும்பப்படுபவன்தான். அமெரிக்காவில் 'சூப்பர் மேனை'ப் போலவே 'சக்கைபோடு' போட்ட வேறு பல காமிக்ஸ்கள் வெளிவந்தன. அதீத வலிமையும் பறக்கும் ஆற்றலுமுடைய ‘கேப்டன் ட்ரையஃப்', மீன்களுடன் பேசும் ஆற்றலுடைய 'ஆக்வாமேன்', நினைத்தவுடன் தீப்பிழம்பாகிவிடும் 'ஹ்யூமன் டார்ச்,' கதவுக்கடியிலுள்ள சிறு சந்தில் கூட நுழைந்து சென்றுவிடக்கூடிய அளவுக்கு மிகவும் தட்டையானவானாகக் கூடிய ‘தி தின் மேன்', நீர்க்குட்டையாக மாறி மீண்டும் மனித உருவுக்கு வந்து சேரும் 'ஹைட்ரோமேன்,' தனது பார்வையாலேயே மற்றவர்களைக் கொல்லும் திறனுடைய 'கோமெட்' எனத் தொடரும் இந்த அதிமானுடக் கற்பனைப் பாத்திரங்களின் முன்னோடியாக இருந்தது 'ஹ்யூமன் பாம்ப்' (மனித வெடிகுண்டு)
எதைத் தொட்டாலும் அதை வெடித்துச் சிதற வைக்கக்கூடிய ஆற்றலுடையதாகச் சித்தரிக்கப்பட்ட அந்தக் கார்ட்டூன் பாத்திரம், 1941 இல் பால் குஸ்டாங்ஸன் என்னும் கார்ட்டூனிஸ்டால் உருவாக்கப்பட்டது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், அச்சமயம், உலகின் மிகப் பெரும் தீமையாக அமெரிக்க மக்களால், அரசால், ஊடகங்களால் கருதப்பட்டவர்கள் ஜெர்மானிய நாஜிக்கள். எனவே அவர்களை அழிக்கக்கூடியவனாக ஒரு கார்ட்டூன் பாத்திரம் உருவாக்கப் பட்டதில் வியப்பில்லை, 'மனித வெடிகுண்டி'ன் உண்மையான பெயர் (அதாவது காமிக்ஸில்) ராய் லிங்கன். வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் வல்லநராக இருந்த அவனது தந்தையுடன் இரசாயனக் கூடத்தில் வேலை பார்த்து வருகிறான். அவனது தந்தை சக்திவாய்ந்த 27-QRX என்னும் இரசாயனக் கலவையைத் (வெடி பொருளை) தயாரிக்கிறார். அதைத் திருடிச் செல்வதற்காக நாஜிகள் வருகின்றனர். கைகலப்பில் ராய் லிங்கனின் அப்பா கொல்லப்படுகிறார். ஆனால் நாஜிகளின் கைக்கு அந்த இரசாயனப் பொருள் சென்றுவிடாமல் தடுப்பதற்காக ராய் அதை எடுத்து விழுங்கி விடுகிறான். என்ன ஆச்சரியம்! அந்தக் கொடிய இரசாயனப் பொருள் அவனைக் கொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவனது கைகள் ஒளிரத் தொடங்குகின்றன. தாக்க வந்த நாஜியொருவன் ராயின் கை பட்டவுடனேயே வெடித்துச் சிதறுகிறான். எதைத் தொட்டாலும் பொன்னாக மாறுகிற மைதாஸ் கதைபோல இருக்கிறதல்லவா? எதைத் தொட்டாலும் அது வெடிக்கும் என்றால், அது பேராபத்தில் போய் முடியும், தன்னைத் தானே அழித்துக் கொள்ளவும் நேரிடும் என்பதை உணரும் ராய், தேவைப்படும்போது மட்டும் அந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற சமயங்களில் அஸ்பெஸ்டாஸால் ஆன கையுறைகளை மாட்டிக் கொள்கிறான். அஸ்பெஸ்டாஸ் கையுறைகளுடனேயே அவனைப் பார்த்து வந்த காமிக்ஸ் இரசிகர்கள், பின்னர் 'நார் மெழுகு' என்னும் பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட கையுறைகள் அணிந்தவனாகச் சித்தரிக்கப் படுவதைக் கண்டார்கள். ஏன் இந்த மாற்றம்? அஸ்பெஸ்டாஸால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களின் உடல் நலத்துக்கும் பெருங்கேடு ஏற்படும் என்னும் உண்மை அமெரிக்க மக்களுக்குத் தெரிய வந்ததுதான் நிஜ வாழ்க்கையைப் போலவே காமிக்ஸிலும் அஸ்பெஸ்டாஸ் (அமெரிக்காவில் மட்டுமே) தவிர்க்கப்பட்டது.
நாஜிகளை எதிர்த்துப் போராடும் இந்த 'மனித குண்டு காமிக்ஸு'க்கு 1946வரை அமெரிக்காவில் மவுசு இருந்தது. நாஜிகள் தோற்கடிக்கப்பட்டட பிறகு அமெரிக்காவுக்கு வேறு எதிரிகள் வேறு தீமைகள் தென்படத் தொடங்கின! அதற்கேற்ப, 'நல்லவர்’ 'தீயவர்' தொடர்பான புதுப்புது காமிக்ஸ் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படுகின்றன. 'காமிக்ஸ் மனித குண்டு' மறைந்து விட்டது. ஆனால் அமெரிக்கர்களை, ஏன் உலகிலுள்ள பிற மக்களையும் மிரட்டுகின்ற உண்மையான மனித குண்டுகள் தோன்றியுள்ளன. இவை கார், லாரி, டிரக், மோட்டார் சைக்கிள், படகு, ஓட்டகம் எனப் பல அவதாரங்கள் எடுத்துள்ளன. ஆகாய விமானங்கள் வடிவத்திலும் வந்து விட்டன. உலகின் அனைத்துக் பகுதிகளிலும் - குறிப்பாக பெருநகரங்களில் மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளன. அவற்றின் பரிணாம வளர்ச்சி, அரசியல்-பொருளாதார, சமூகப் பின்னணி, அவை எழுப்பியுள்ள அறவியல் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆராய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
*****
நமக்கு அறிமுகமான முதல் மனித குண்டுகள்
1991 மே 21ஆம் தேதி இரவு 11.30 மணி, தொலைபேசி மணி அடித்தது. என்ன இந்த நேரத்தில், யார்?
சற்றுப் பதற்றத்துடன் தொலைபேசியை எடுத்தேன். முக்கிய நண்பரொருவர் பேசினார்: 'ஹிந்து' அலுவலகத்திலிருந்து செய்தி வந்தது. திருப்பெரும்புதுாரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு விட்டாராம். இன்னும் ஏராளமானோரும் செத்திருக்கிறார்கள். மேலதிக விவரம் தெரியவில்லை
அது 24 மணி நேரச் செய்தி ஒலிபரப்புத் தொலைக்காட்சிச் சானல்கள் இல்லாதிருந்த காலம். உறக்கமற்ற இரவுக்குப் பின், விடியற்காலையில் வரும் செய்தியேடுகளுக்குக் காத்திருந்தேன். இடுப்புக் கச்சையில் மரணத்தைக் கட்டிக் கொண்டு சென்ற தனுவைப் பற்றிய செய்திகள். சின்னாபின்னமாகச் சிதறி இரத்தக்குட்டைகளில் ஊறிக் கொண்டிருந்த மாமிசப் பிண்டங்கள். இன்னும் முழுமையாக அவிழ்க்கப்படாத புதிர்களைக் கொண்டுள்ள அந்தச் சம்பவத்தின் மூலமே 'மனித வெடிகுண்டு' தமிழகத்திற்கு, ஏன் இந்தியா முழுமைக்குமே முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளால்.
இதற்கு முன் என் தலைமுறையைச் சேர்ந்த பலர் செவிவழியாகத் தெரிந்து கொண்டிருந்த செய்தியொன்று இருந்தது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப் போர்க் கப்பல்களை அழிப்பதற்காக, ஜப்பானியப் போர் விமானங்கள் தற்கொலைப் படைவீரர்களை ஏற்றிக்கொண்டு வருமாம். இடுப்பில் குண்டுகளைக் கட்டிக்கொண்ட படைவீரர்கள், குறிப்பிட்ட கப்பலுக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் போர் விமானத்திலிருந்து கப்பலின் புகைப்போக்கிக் குழாய்க்குள்ளேயே நேராகக் குதித்து, குண்டுகளை வெடிக்கச் செய்து அக்கப்பலை அழிப்பார்களாம்! 'எம்டன்' விவகாரம் போல் இதுவும் சற்று மிகைப்படுத்தப்பட்ட செய்திதான் என்றாலும் அதில் உண்மையும் இருப்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டேன்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்பது குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழிப்பதற்காகக் குண்டை எடுத்துச் செல்கிறவர் தானும் செத்து மடியத் தயாராக இருப்பதுதான். மதம், அரசியல், இனவெறி போன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. நவீன காலத்தில் தற்கொலைத் தாக்குதல்களைத் தொடங்கி வைத்தவர்கள் ஜப்பானியப் போர் விமானிகள், இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் போர்க்கப்பல்களை அழிப்பதற்காக, அந்தக் கப்பல்களின் மீது தாங்கள் ஓட்டிச் செல்லும் விமானங்களையே மோதி அவற்றையே குண்டுகள் போல வெடிக்கச் செய்து தங்களையும் மாய்த்துக் கொண்டவர்கள் 'காமிகாஸெ விமானிகள்' (kamikkaze pilots) என அழைக்கப்பட்டனர். அதே போல ஜப்பானிய கடல் படையும் கூட, தற்கொலைப் படையினரைப் பயன்படுத்தியது. ஒன்று அல்லது இரண்டு தற்கொலைப் போர் வீரர்களால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் குண்டுகள், அதாவது 'டார்பிடோக்கள்' (ஜப்பானிய மொழியில் இவை 'கெய்டன்கள்' - Keitans என அழைக்கப்பட்டன) கடற்கரையோரம் உள்ள எதிரிகளின் இராணுவப் பாதுகாப்பு முகாம்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய தாக்குதலில் அந்தக் குண்டுகளை இயக்குபவர்களும் கொல்லப்படுவர்.
பிரெஞ்சு ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியிலும் கூடத் தற்கொலைப் போராளிகள் இருந்தனர். அவர்கள் நீண்ட குச்சி போன்ற வெடிகுண்டொன்றைக் கொண்டு பிரெஞ்சு டாங்கிகளைத் தகர்ப்பதுடன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வர்.
எனினும் இந்தத் தற்கொலைப் போராளிகள் தாக்கியவை, அவரவரது எதிரிகளின் இராணுவ இலக்குகளையும் எதிரிப் படை வீரர்களையும் தானேயன்றி, இராணுவத்துடன் தொடர்பில்லாத இலக்குகளையோ சாதாரணக் குடி மக்களையோ அல்ல.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் 'பிரசித்தி’ பெறத் தொடங்கியது 1983ல்தான். லெபானன் தலைநகர் பெய்ரூட்டிலிருந்த 'பன்னாட்டுப் படைவீரர்களின்' பாடிவீடுகளைத் (barracks) தாக்கி 300 பேர்களைக் கொன்றன ஹிஸ்பொல்லா அமைப்பு அனுப்பிய கார் குண்டுகள். அதன் பிறகு விடுதலைப் புலிகள், குர்திஸ் தொழிலாளர் கட்சி, ஹமாஸ், செசன்யா இஸ்லாமியப் போராளிகள், அல்ஜீரிய 'இஸ்லாமிய’ தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள் எனப் பல்வேறு வகையான இயக்கங்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கின.
தற்கொலைக் குண்டுகள் பல வடிவங்களில் வரலாம். ராஜிவ் காந்தியைக் கொன்ற தனுவைப் போல, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், குர்திஸ் தொழிலாளர் கட்சி, ரஷியாவிலுள்ள செசென்யாப் போராளிக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பெண் போராளிகள் போல இடுப்புக் கச்சையில் குண்டைக் கட்டிக் கொண்டோ, ஒப்பனைப் பொருட்களுக்கான கைப்பைகளில் மறைத்து வைத்துக் கொண்டோ வரும் மனித குண்டு; 1990களில் யேமன் நாட்டிலிருந்த யு.எஸ்.எஸ்.கோல் என்னும் அமெரிக்கப் போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்காகப் பயன்படுத்தப் பட்ட குண்டுகள் நிரம்பிய படகு: நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையக் கட்டடத்தின் கோபுரங்களைத் தகர்க்கப் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்கள்; பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பள்ளத்தாக்கில் விழும்படி செய்தல்; இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த தீவிரவாதிகள் எனப் பல வடிவங்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், விரக்தி மனப்பான்மையினர், உளநோயால் அவதிப்படுபவர்கள் அல்லது உடல்கூறுக் கோளாறுகள் உடையவர்கள் எனச் சிலரால் சொல்லப்படுகிறது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பெரும் எண்ணிக்கையில் நடைபெற்றுள்ள ஆஃப்கானிஸ்தானத்தில் 2007இல் நடத்தப்பட்ட ஆய்வொன்று, தற்காலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களில் எண்பது விழுக்காட்டினர் ஏதோவொரு வகையில் உடல் ஊனமடைந்தவர்களாகவும் மனம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் எனக் கூறுகிறது. தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி உடல் சிதறிச் செத்தவர்களின் சிதறுண்ட உடல் பாகங்களைப் பரிசோதித்த உடற்கூற்றியல் மருத்துவர் டாக்டர் யூஃசெப் யதாகிரி என்பவர், அந்த 110 பேரில் எண்பது விழுக்காட்டினர் ஏற்கனவே கை கால் முடமானவர்களாகவோ, புற்றுநோய், தொழுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருந்தனர் எனக் கூறுகிறார். ஆனால், ஹஸ்பொல்லா, விடுதலைப் புலிகள், குர்திஸ் தொழிலாளர் கட்சி, செசன்யா இஸ்லாமியப் போராளிகள் போன்ற தேசிய விடுதலைப் போராட்ட அமைப்புகளானாலும் சரி, அல்-கெய்தா போன்ற மத தீவிரவாத அமைப்புகளானாலும் சரி, அந்தந்த இயக்கங்களின் குறிக்கோளையும் கருத்துநிலைகளையும் (ideologies) முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள், மிக இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள் தற்கொலைப் போராளிகளாக மாற முன்வருகிறார்கள். ஹிஸ்பெல்லாக் கார் குண்டுத் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் பலரைப் போலவே, உலக வர்த்தக மையக் கட்டடத்தைத் தகர்த்தவர்களும் கூட கல்லுாரிப்