Mezhi Pidikkum Kai
()
About this ebook
தமிழ்நாட்டின் கொங்குமண்டலத்தின், தென்கிழக்குப் பகுதியில். நகரத்தொடர்பு ஏதுமற்ற ஒரு சிற்றூரின்கண் , வேளாண்குடியில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் போராட்டத்தையும், இடர்ப்பாடுகளையும் , கிராம சமுதாயத்தில் கடந்த மூன்று தலைமுறைகளில் ஏற்பட்ட வேளாண்மை சார்ந்த சூழல் மாற்றங்களையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியதே மேழி பிடிக்கும் கை என்ற இந்நூல். நுண்ணிய நோக்கில் ஒரு சிற்றூரில் வாழ்ந்த மாந்தரையும், நிகழ்ந்த நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவதாக இது அமைந்தாலும், “ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்" என்ற அடிப்படையில் தமிழக கிராமப் புறங்களில் கடந்த அறுபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பொதுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்நூல்.
Read more from Dr. V. Kulandaiswamy
Vaazhviyal Koorum Solavukal Nooru Rating: 0 out of 5 stars0 ratingsTamil Nilam Tharanikku Thilagam Rating: 0 out of 5 stars0 ratingsArunjorkuvai Rating: 0 out of 5 stars0 ratingsMaanidar Padhitha Kaaladi Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsSanga Poongavil Koytha Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPudhuneri Venpakkal Rating: 0 out of 5 stars0 ratingsArunthogaiyin Athirvalaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mezhi Pidikkum Kai
Related ebooks
Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsKambarin Thirukkai Vazhakkam Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Athisaya Idangal! Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Samudhaya Varalatril Penmai Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavugal... Un Kaaladiyil... Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Part-2 Rating: 0 out of 5 stars0 ratingsKongu Nattu Koilgal Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Thadai Neekkum Deiveega Thiruthalam Rating: 0 out of 5 stars0 ratingsSathanai Semmal Sa.Ve.Su. Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Uyirkaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKambarin Yerzhubathu Rating: 0 out of 5 stars0 ratingsRamayanam Ayodhya Kandam – Kambar – Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiyam Moolam India Inaippu - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsThiruneri! Rating: 0 out of 5 stars0 ratingsAthisayangal! Ulaga Athisayangal! Rating: 0 out of 5 stars0 ratingsNaarthaamalai Sivan Koyilgal Arputhangal Rating: 0 out of 5 stars0 ratingsAan Alumaiyil Pen Karppu Rating: 0 out of 5 stars0 ratingsஇராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Vainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsSevviyal Aringar Oriza Balu Rating: 0 out of 5 stars0 ratingsVeppamaramum Sila Kaakangalum Rating: 0 out of 5 stars0 ratingsIyarkkaiyai Seerkulaitha 'Aararivu' Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar Rating: 0 out of 5 stars0 ratingsPuligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Mezhi Pidikkum Kai
0 ratings0 reviews
Book preview
Mezhi Pidikkum Kai - Dr. V. Kulandaiswamy
https://www.pustaka.co.in
மேழி பிடிக்கும் கை
Mezhi Pidikkum Kai
Author:
முனைவர். வே. குழந்தைசாமி
Dr. V. Kulandaiswamy
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-v-kulandaiswamy
பொருளடக்கம்
1. அன்றைய வேளாண் சமுதாயச் சூழல்
2. மார்க்கண்டாபுரம் என்னும் சேய்மைச் சிற்றூர்
3. விழுமிய வேளாண் மரபு
4. நோன்புகள் விழாக்கள்
5. விரிவாக்கமும் வளர்ச்சியும்
6. வரம்பில்லா வேளாண் பணிகள்
7. கேளிக்கைகளும் பொழுதுபோக்கும்
8. திருமண ஏற்பாடு
9. எளிமையும் இனிமையும் கலந்த திருமணம்
10. மனையியல் மாண்புகள்
11. மகப்பேறு
12.வேளாண்மையில் புதுமைகளும் சமூக மாற்றங்களும்
13. ஆண்வாரிசே அரச வாரிசு
14. நீராதாரம் தேடும் முயற்சி
15. கல்வியில் நாட்டம்
16. புத்தாக்கம் பெற்ற பால் உற்பத்தி
17. பூத்தது பொற்கொடி
18. குமாரசாமியின் கல்லூரிச் சேர்க்கை
19. வேளாண்மையில் எதிர்கொண்ட இடர்கள்
20. பெரியநாயகியின் திருமணம்
21. குமாரசாமி ஆசிரியப்பயிற்சி பெறல்
22. புதுக்குடித்தனம்
23.ஆசிரியப்பணியில் குமாரசாமி
24. பெரியநாயகிக்கு மகப்பேறு
25. குமாரசாமியின் திருமணம்
26. நீருக்கான மற்றுமொரு போராட்டம்
27. குமரவேல் கவுண்டரின் மறைவு
28. சுப நிகழ்ச்சிகள்
29. கிராமசமூகத்தில் சூழல் மாற்றங்கள்
30. செல்லாத்தாளின் உடல் நலிவு
31. மாறிவரும் வாழ்க்கைச் சூழல்
32. நிலத்தோடு நீங்கிய தொடர்பு
33. உறவுகளோடு ஊடாடுதல்
34. காற்றாலைகளின் தோற்றம்
35. குத்தகைதாரரின் வேண்டுகோள்
36. நாச்சிமுத்துக் கவுண்டர் மூச்சடங்குதல்
37. காற்றாலை நிறுவும் முயற்சி
38. இளைய தலைமுறையினர் ஏற்றம் பெறல்
39. சரவணன் புலம் பெயர்தல்
40. புதிதாய் இணைந்த உறவுகள்
41. தாயார் பிரிவும் தளர்வுற்ற உடல் நிலையும்
42. கோவை மருத்துவமனையில் சேர்த்தல்
43. பொன்னுத்தாயின் பிரிவு
44. சென்னியப்பனின் இடப்பெயர்வு
45. சரவணனின் வருகை
46. வணிகவளாகம் உருவாக்கும் முயற்சி
47. சீர்மிகு சென்னியப்பா வணிகவளாகம்
48. அன்னியம் அல்ல அன்னியோன்னியம்
49. பயண ஏற்பாடுகள்
50. சென்னியப்பன் இல்லம் ஏகுதல்
51. அமெரிக்கப்பயணம்
52. இல்ல வாழ்க்கையால் உள்ளம் தெளிதல்
மேழி பிடிக்கும்கை, வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை
(கம்பர் – தனிப்பாடல்)
கருத்துக்களம்
மேழி பிடிக்கும் கை
என்னும் தலைப்பிலான இந்நூல் ஒரு வாழ்வியல் புதினம். இதன் கருத்துக்களம் முப்பரிமாணம் கொண்டது. அதாவது, காலம், இடம், சூழல் ஆகிய மூன்று கோணங்களை உள்ளடக்கியது.
இந்திய நாடு விடுதலை பெற்ற காலத்தில், நாட்டுப்புறங்கள் விடியலைக் காணாது, இருளிலும் அறியாமையிலும் பழமையிலும் மூழ்கிக்கிடந்தன. மக்களின் வாழ்வியலும் விழுமியங்களும் இடைக்காலச் சமுதாயத்தை நினைவூட்டுவதாய் இருந்தன. அதன்பின் 1950 இல் தொடங்கி 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான சுமார் அறுபது ஆண்டு காலத்தில் ஏற்பட்ட கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சியாலும், சமத்துவக் கருத்துகளாலும், கடந்த 500 ஆண்டுகளில் காணப்படாத மாற்றங்கள், குறிப்பாக தமிழகத்தில், அண்மைக்காலத்தில் பெருமளவில் நிகழ்ந்துள்ளன.
வெளியுலகத்துக்குப் புலப்படாத, அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
என்பது போன்ற ஒரு சிற்றூரில் மேன்மையான வேளாண் குடியில் பிறந்த ஒருவனின் வாழ்க்கைப் போராட்டத்தையும், எதிர்கொண்ட இடர்ப்பாடுகளையும், ஏற்றங்களையும் உள்ளடக்கி, நுண்ணிய நோக்கில் இந்நூல் புனையப்பட்டது. எனினும், எண்ணற்ற கிராமங்களில் வாழும் ஒட்டுமொத்த வேளாண் பெருமக்களின் நிலையை, ‘ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்’ என்ற அடிப்படையில் பொதுமைப் படுத்துவதாயும் இஃது அமையும்.
எந்த ஒரு சூழல் மாற்றமும், தனிமனிதனிடமும் சமுதாயத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். மாற்றங்களுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பொறுத்துத்தான் தனிமனிதனோ சமுதாயமோ முன்னேற்றம் அடைய இயலும். அதே சமயம் புதுமைகளெல்லாம் போற்றுதற்குரியன என்று சொல்லமுடியாது ; வேண்டாத விளைவுகள் உட்புகுதலும் உண்டு.
வேளாண்மைத்தொழில் நலிவுற்றதால், வேளாண்மையை மட்டும் சார்ந்திருந்தவர்கள் தங்கள் நிலையில் தாழ்ந்தனர். கல்வி வளர்ச்சியால் பெற்ற உயர்வும், தொழில் வணிக வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தின. உற்பத்தி மையமாய் இருந்த கிராமங்கள் நுகர்வு மையங்களாய் மாறிவருகின்றன. மேழி பிடிக்கும் கை
என்னும் தலைப்பை உடைய இந்நூல், இத்தகைய சமுதாய மாற்றங்களைக் கதைமாந்தர் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டும் ஒரு சிறிய முயற்சி.
இக்கதையில் உலாவரும் கதைமாந்தர்கள் எல்லாரும் முற்றிலும் புனைவாய்க் கற்பனையில் உருவாக்கப்பட்டவர்களல்ல. இவ்வுலகின்கண் நடமாடிய, உடைமைகளைக் காட்டிலும் உறவுகளைப் பேணிப் பெட்டாங்கு வாழ்ந்து, மறைந்தும் மறையாமல் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கும், முன்னோர்களின் சால்பும் சாயலும் கொண்டோரே இக்கதைமாந்தர்.
மேற்கூறிய காரணிகள் எல்லாம் ஊடையும் பாவுமாய் ஒன்றிணைந்து உருவானதுதான் இந்நூல்.
1. அன்றைய வேளாண் சமுதாயச் சூழல்
இந்திய நாட்டில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கிராமங்கள் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்றாலும் அவை உயிர்ப்போடு இருந்தன. கிராம சமுதாயம் முற்றிலும் வேளாண்மையை நம்பியே இருந்தது. கிராமங்கள் பெருமளவில் தற்சார்புடையனவாக இருந்தன. மக்களின் அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கிராமங்களிலேயே நிறைவு செய்யப்பட்டன. மக்களின் தேவைகள் பல்கிப் பெருகாத நிலையில், பணப்பரிமாற்றம் குறைவாகவும் பண்டப்பரிமாற்றம் மிகுதியாகவும் இருந்தது. மக்கள் பெரும்பாலும் பரம்பரைத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். கல்வி என்பது திண்ணைப் பள்ளியோடு நின்றுவிட்டது ; அதுவும் ஆண்பிள்ளைகளுக்கே உரியதாய் இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டு, மிகப்பெரும்பாலானோர் அவரவர் குடிசார்ந்த தொழில்களில் இயல்பாக ஈடுபட்டனர். மிகவும் அரிதாகவே சில ஊர்களில் அரசின் தொடக்கப்பள்ளிகள் இயங்கிவந்தன. எழுதப்படிக்கத் தெரிந்தாலே போதும் என்ற மனப்பான்மை அனைவரிடமும் நிலவியது. பெண்களுக்கு அத்தகைய அடிப்படைக்கல்விகூடத் தேவையில்லை என்று கருதப்பட்டதால் அவர்கள் இளவயது முதற்கொண்டு சிறு சிறு வீட்டு வேலைகளிலும் வேளாண்மைப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
வானம்பார்த்த பூமியும் மேட்டு நிலங்களும் நிறைந்த கொங்குநாட்டின் கிராமப்புறங்களில் வேளாண்மை விளைச்சல் என்பது பெரும்பாலும் ஒருபோக விளைச்சலாகவே இருந்தது. நீர்ப்பாசனம் என்பது கிணற்றுநீரை எருதுகளின் துணைகொண்டு கவலை பூட்டி நீரேற்றம் செய்யும் முறையிலேயே நடைபெற்றது. நீரூற்றின் அளவு மற்றும் கிணறுகளின் பரப்பளவுக்கேற்றபடி இரண்டு அல்லது மூன்று வாரிகள் அமைக்கப்பட்டன. மூன்றுவாரி நீர் இறைப்புக்கு ஆறு எருதுகளும் மூன்று ஆட்களும், நீர் பாய்ச்சுதற்கு ஒருவருமாக நான்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.
எருதுகள் கொண்டு ஏற்றம் இறைப்பதை இப்பகுதியில் கவலையோட்டுதல் என்பர். பிற பகுதிகளில் கமலை என்றும் கூறுவர். இது மிகவும் கடுமையான பணி. செவ்வக வடிவமான பாசனக் கிணற்றின் நான்கு பக்கங்களில், அகலம் அதிகமான ஒரு பக்கத்தை ஒட்டிக் கருங்கல்லாலான ஒரு நெடுஞ்சுவர் இருக்கும். இதற்கு துலைக்கட்டு என்று பெயர். மற்ற மூன்றுபக்கங்களில் உள்ள மண்சுவர்களை, ஓர் ஆள் உயரத்துக்கு சுமார் மூன்று அடி அகலம் தோண்டி ஆழப்படுத்திக் கிணற்றின் உள்சுற்றில் சுற்றிவரும் வகையில் இடம் ஒதுக்கப்படும். இதுவே பாம்பேறி எனப்படும்.
துலைக்கட்டுப் பகுதியில் துளையிடப்பட்ட கல்தளங்கள் இரண்டு இணையாக ஒவ்வொரு வாரியிலும் அமைக்கப்படும். அந்தத்துளைகளில் மரத்தாலான ஏற்றுக்கால்கள் நாட்டப்பட்டு அவற்றை இணைக்கும் குறுக்கு விட்டமும் அமைக்கப்படும். அந்தக் குறுக்குவிட்டத்தில் இரும்பாலான பெரிய உருளை பொருத்தப்படும். அதேபோல் கீழ்ப்பகுதியில் மரத்தாலான ஓர் உருளை (கவலைவண்டி) பொருத்தப்பட்டிருக்கும். மேல்பக்கம் தொங்கும் இரும்பு உருளையில் வடக்கயிறு என்ற வலிமையான கயிறும், கீழ்ப்பகுதி மர உருளையில் வால்கயிறு என்ற திடமான கயிறும், இழுக்கும் வகையில் இணைக்கப்படும். வடக்கயிறு கிணற்றின் நீர்நிலையில் மிதக்கும் இரும்புத்தகடுகளால் உருவாக்கப்பட்ட முகவைச்சால் என்ற நீர் முகக்கும் அகன்றவாயுள்ள பெருங்கலத்தில் இணைக்கப்படும். வால்கயிறு முகவைச்சாலின் குறுகிய கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தோல்தும்பியில் இணைக்கப்படும். இந்த இரண்டு கயிறுகளும் மறுமுனையில் மாடுபூட்டும் நுகத்தடியில் இணைக்கப்படும். கிணற்றின் ஆழத்துக்கேற்றபடி வாரியின் நீளமும் கயிற்றின் நீளமும் இருக்கும். வாரிகள் சரிவாக, நுகத்தில் பூட்டப்பட்ட எருதுகள் முன்னோக்கியும் பின்னோக்கியும் நகரும் விதமாக அமைக்கப் பட்டிருக்கும். எருதுகளைப் பின்னோக்கி நகரச்செய்தால் சாலும் பறியும் கீழ்நோக்கிச் சென்று கிணற்றின் நீர்நிலையை அடையும். பின்னோக்கி மாடுகளை இழுக்க ஏற்றம் ஓட்டுபவர் ஒரு கயிற்றில் இரு எருதுகளின் மூக்கணாங்கயிற்றை ஒருமுனையில் இணைத்து, மறுமுனையில் அக்கயிற்றை ஒரு கோலில் இணைத்து அக்கோலைத்தன் ஆட்காட்டிவிரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் வைத்து இறுகப் பற்றிக்கொள்வார். அக்கோல்கொண்டு மாடுகளைப் பின்னோக்கி இழுத்தால் எருதுகள் நகர்ந்து வாரியின் தலைப்பகுதிக்கு வரும்.
சால்பறியில் நீரை முகக்கும்பொருட்டு, கவலை ஓட்டுபவர் கீழ் உருளையில் உருளும் வால்கயிற்றை இழுக்க, சால்பறி கவிழ்ந்து நீரை முகந்துகொள்ளும். அதன்பின் வால்கயிற்றை விட்டுவிட்டு மாட்டை முன்னோக்கி ஓட்டவேண்டும். அப்போது ஏற்றம் ஓட்டுபவர் வடக்கயிற்றின்மேல் தாவி உட்கார்ந்துகொள்வார். அதனால் எருதுகளின் கழுத்துப்பாரம் சமநிலைப்படும் ; எருதுகளுக்குச் சுமை குறையும். பயிற்சி இல்லாதவர்கள் வடக்கயிற்றில் தாவி உட்காரும்போது கீழே விழநேரலாம்.
எருதுகள் முன்னோக்கிச்சென்று வாரியின் கீழ்முனையை அடையும்போது, நீரைச் சுமந்துகொண்டு மேல்நோக்கி வரும் சாலும் பறியும் ஏற்றக்காலின் அருகில் வரும். அப்போது ஏற்றம் ஓட்டுபவர் வால்கயிற்றை இழுத்தால் நீர் வாய்க்கால்த் தொட்டியில் கொட்டி, வாய்க்காலில் வழிந்தோடும். அவ்வாறு வால்கயிற்றை இழுத்து நீரை வெளியேற்றத் தவறிவிட்டால், புவியீர்ப்பு விசையால் சால்பறி நீருடன் கீழ்நோக்கிச் செல்லதொடங்கும் ; எருதுகள் நிலைதவறிப் பின்னால் இழுக்கப்பட்டுக் கட்டுப்பாட்டை இழக்கும். இதனால் விபத்து நிகழ வாய்ப்பு உண்டு. ஆகவே இப்பணி மிகவும் கவனத்துடன் செய்யவேண்டிய பணியாகும்.
இதே முறையில், இணையாக இரண்டு அல்லது மூன்று வாரிகளில் ஒரே நேரத்தில் நீர் இறைக்கும் பணி நடைபெறும். வாய்க்கால் வழியாக நீர் மடைகளுக்கும் பாத்திகளுக்கும் செல்லும். அங்கிருக்கும் நீர்பாய்ச்சும் ஆள் மண்வெட்டியால் மடைமாற்றம் செய்து சீராகப் பாத்திகளில் நீர்பாய்ச்சுவார்.
மேலும் எருதுகளுக்குத் தேவையான பிண்ணாக்கை ஊறவைத்து அத்துடன் தவிடு மற்றும் செக்கில் ஆட்டிய பருத்திக்கொட்டை கலந்து சத்துள்ள தீனி கொடுத்தால்தான் அவை நீரேற்றப்பணியில் தொய்வின்றிச் செயல்பட இயலும். காலை 7 மணியளவில் தொடங்கும் நீரேற்றப்பணி 11 மணிவரை, உணவு இடைவேளை நீங்கலாக, தொடர்ச்சியாக இயங்கும். அதன்பின் எருதுகள் மேய்ச்சல் காட்டுக்கு மேய்வதற்காக ஓட்டிவிடப்படும். இவ்வாறு அன்றாடம் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஓர் ஏக்கர் என்ற அளவில் 5 அல்லது 6 ஏக்கர் நிலத்துக்குச் சுழற்சிமுறையில் நீர்ப்பாசனம் செய்ய இயலும்.
நீரேற்றப்பணியில் ஈடுபடும் ஆட்களுக்கு (கவலை ஓட்டுபவர்கள் என்பர்) காலை உணவு தயாரித்து மண்பாண்டங்களில் இட்டு, மூங்கில் கூடைகளில் வைத்துத் தலைச்சுமையாய்க் கிணற்றடிக்குக் கொண்டுசென்று சேர்க்கவேண்டும். இது முழுக்க முழுக்கப் பெண்களின் பணியாகும். மேலும் நீரேற்றப்பணி தடையின்றி நடக்கக் கைத்தொழில் சார்ந்த பல்வேறு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எருதுகள் வாரிகளில் சலிக்காமல் முன்னும் பின்னும் சென்றுவர வேண்டுமெனில், அவற்றின் கால் குளம்புகளில் இரும்பாலான லாடம் அடிக்கவேண்டும். அதற்கு எருதுகள் தரையில் கிடத்தப்படவேண்டும். திறன்வாய்ந்த கொல்லர்-ஆசாரி மாடுகளின்மேல் கயிற்றைவீசிச் சுற்றி இறுக்கி, லாவகமாகக் கீழே சாய்ப்பார். அதன்பின் கால்களைக் கயிற்றால் இறுக்கிக்கட்டி கால் குளம்புகளில் லாடம் பொருத்துவார்.
கிணற்றில் நீரைமுகக்கும் சாலும், நீரைச் சிந்தாமல் வெளியேற்ற அந்தச் சாலோடு இணைக்கப்பட்ட தோலாலான தும்பியும் நீரேற்றத்தின் முக்கியமான உபகரணங்கள். இரும்புத் தகடுகளாலான சாலைப் பழுதுபார்க்கக் கொல்லரும், தோல்பறியைத் தைக்கவும் பொருத்தவும் அருந்ததியரும் சிறப்பான பங்களிப்பை நல்குவர். மேலும் கிணற்றின் துலைக்கட்டு, வாய்க்கால், ஏற்றுக்கால், வடக்கயிறு, வால்கயிறு போன்றவையும் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அத்துடன் மண்பாண்டத் தொழிலாளர்கள், கூடை முடைவோர் ஆகியோரது பங்களிப்பும் வேளாண்மைப் பணிக்கு உறுதுணையாக அமையும். ஆகவே கிணற்றுநீர்ப் பாசனம் என்பது பல பரம்பரைத் தொழிலாளர்களின் ஒத்திசைவான செயல்பாட்டின் துணைகொண்டே நடைபெறும். ஒரு பண்ணையக்காரர் இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கவேண்டும். அத்துடன் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் தேவைப்படும். இவ்வாறு, இயற்கையாலன்றி, மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன முறையை, அனுபவத்தால் உய்த்துணர்ந்த கொங்குநாட்டுப் புலவர் ஒருவர் தனது கவிதையில் வடித்துள்ளார் :
அக்காலக் கிணறெல்லாம் இக்காலம் போலில்லை
அகலத்தில் வெட்டவேண்டும், அதற்கேற்பப் பாம்பேறி
தொலைக்கட்டு வாரிஎலாம் அமைப்போடு செய்யவேண்டும்!
உட்காலாய்ப் பண்ணைவாய் உருளைகளும் பலவிதமாய்
உதைகாலும் வலிமைவேண்டும்! உறுதியாய்ச் சால்பறியும்
தோல்தும்பி வடக்கயிறும் வால்கயிறும் இருக்கவேண்டும்!
நிற்காமல் இழுக்கின்ற எரு(து)இரண்டு கண்டிப்பாய்
நேர்த்தியாய் இருக்கவேண்டும் ; நெடுநீளத் தலைவாரி
வரைஓட்டிச் சால்பறியில் நீர்மொண்டு பண்ணைவாய்க்குள்
மிக்கூற்றும் திறனுடைய கவலைஓட் டத்தெரிந்த
வீரர்களும் மிகவும்வேண்டும், மின்மோட்டார்க் காலத்தில்
வாழ்கின்றாய் நீ இதனை வெறுங்கதைஎன் றெண்ணக்கூடும்!
(புலவர் பொன்முடி சுப்பையன், தியாகம் விளைந்த செம்புலம்)
ஏர்பிடித்தல் பணியும் இவ்வாறானதே. இது எருதுகளும் மனிதர்களும் இணைந்து செயல்படும் செவ்விய பணி. இப்பணி மழைக்காலங்களில் பெருமளவிலும், மற்ற நாட்களில் சிறிதளவும் நடைபெறும். உழவுக்கான ஏர்க்கலப்பைகளைச் செய்வது தச்சரின் பணியாகவும், ஏரின் நுனியில் பொருத்தப்படும் கொழுமுனையைச் செய்துகொடுப்பது கொல்லரின் பணியாகவும் இருக்கும். ஒவ்வொரு வேளாண்மைக் குடும்பத்திலும் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்றாற்போல் ஒன்று முதல் நான்கு ஏர்கள்வரை வைத்திருப்பார்கள். அதுபோன்றே எருதுகளின் எண்ணிக்கையும் இரண்டு முதல் எட்டுவரை இருக்கும். மழை பெய்த மூன்றாம் நாள் உழவுப்பணி தொடங்கும். அதிகாலை தொடங்கி உச்சிவேளைக்கு முன்னரே, அதாவது 11 மணிக்கு முன்னரே உழவு நிறுத்தப்படும். மூன்று ஏர்களைக்கொண்டு ஒரு நாளைக்குச் சுமார் இரண்டு